பிப்ரவரி 20: சென்னையில் உள்ள சாலைகளில் இந்தியர் அல்லாதவர்களின் பெயர்களை மாற்ற மாநகராட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் 2014- 15 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மாநகர மேயர் சைதை துரைசாமி தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் 132 முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
அப்போது மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 600 கோடி ரூபாய் அளவிற்கு சொத்து வரி வசூலிக்கப்படும் என்று அவர் கூறினார். சென்னையில் உள்ள சாலைகள், பூங்காக்களை சீரமைக்க, ஆயிரத்து 301 கோடி ரூபாயும், மழைநீர் சேமிப்பு வடிகாலுக்கு 450 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் சைதை துரைசாமி தெரிவித்தார்.
மேலும் அம்மா திரையரங்கம், அம்மா வாரச்சந்தை, அம்மா கேன் குடிநீர், அம்மா தங்கும் விடுதி, உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றும் மேயர் கூறினார். அத்துடன் சென்னை நகர சாலைகளில் இந்தியர் அல்லாதவர்களின் பெயர்கள் மாற்றப்படும் என்றும் சைதை துரைசாமி தெரிவித்தார்.
இந்த பட்ஜெட்டில் மக்களுக்கு தேவையான திட்டங்கள் இல்லை என்று குற்றம் சாட்டி திமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் திமுக – அதிமுக உறுப்பினர்கள் இடையே மோதல் உருவானது. இதனையடுத்து திமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
பின்னர் 97 தீர்மானங்கள் மாமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
![]()

