இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்கக் கூடாது என பாஜகவைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ள கருத்துக்கு முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ள ராமேசுவரத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள், 63 படகுகளை உடனடியாக விடுவிக்க அந்த நாட்டு அரசை வற்புறுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இந்தச் சூழ்நிலையில், பாஜகவின் மூத்த உறுப்பினரான சுப்பிரமணியன் சுவாமி, ஊடகங்களுக்கு கடந்த திங்கள்கிழமையன்று அளித்த பேட்டியில், தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்கக் கூடாது என்று இலங்கை அரசுக்கு ஆலோசனை கூறியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அவரது இந்தக் கருத்து, தமிழகத்தில் உள்ள மீனவ சமுதாய மக்களிடம் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக மக்களிடமும் வேதனையையும் வலியையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது கருத்து பாஜகவின் கருத்தாகவோ அல்லது மத்திய அரசின் அதிகாரப்பூர்வ கருத்தாகவோ இருக்காது என்று நிச்சயம் நம்புகிறேன்.
மேலும், இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்ட ராமேசுவரத்தைச் சேர்ந்த 15 மீனவர்களையும் அங்குள்ள 63 படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசின் உயர்நிலை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.
![]()

