உளுந்தூர்பேட்டையில் மாநாடு நடக்கும் இடத்தை உளவு பிரிவு போலீசாருக்குத் தெரியாமல் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பார்த்துச் சென்றுள்ளார்.
ஊழல் நிறைந்த திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என கட்சியைத் துவங்கிய விஜயகாந்த் கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டார். மக்கள் மத்தியில் இது பற்றிய விமர்சனங்கள் எழுந்தது. சேலம் மாநில மாநாட்டில் தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்பவே அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்ததாககூறி தப்பித்துக் கொண்டார்.வரும் லோக்சபா தேர்தலை ஒட்டி விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மாநில மாநாடு நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. இதில் தொண்டர்களின் கருத்து கேட்டு, கூட்டணி குறித்த அறிவிப்பை தே.மு.தி.க., வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பரபரப்பான சூழலில் மாநாட்டிற்குத் தேர்வு செய்த இடம் முன் தேதியிட்டு வேறு ஒருவருக்கு அக்ரிமெண்ட் போடப்பட்டு அவசர அவசரமாக உழுது விதைப்பு செய்யப்பட்டது.இதனால் ஆளும்கட்சி தே.மு.தி.க., மாநாட்டை நடத்த மறைமுகமாக நெருக்கடி கொடுப்பதாக கட்சியினர் புலம்பினர். மாற்று இடம் தேடி மாவட்ட செயலாளர் வெங்கடேசன் எம்.எல்.ஏ., அலைந்து கொண்டிருந்தார். குறிப்பிட்ட இடத்தில் தான் மாநாடு நடக்கும் எனதெரிவித்து வந்தார். இது எப்படியும் பிரச்னைக்கு வழிவகுக்கும் என எண்ணியிருந்தனர். உளவுபிரிவு போலீசார் எம்.எல்.ஏ., வெங்கடேசன், மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகளை கண் கொத்தி பாம்பாக கண்காணித்தனர். மிகவும் ரகசியமாக விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த எறஞ்சியில் இடம் தேர்வு செய்யப்பட்டது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தமாநாட்டை வெற்றிகரமாக நடத்த விஜயகாந்த்தனது மனைவி பிரேமலதாவுடன், எம்.எல்.ஏ., வெங்கடேசனை அழைத்துக் கொண்டு மாநாடு நடக்கும் இடத்தை ரகசியமாக பார்த்துச் சென்றுள்ளார்.
விஜயகாந்த்க்கு முழு திருப்தி ஏற்பட்ட பிறகே அக்ரிமெண்ட் போடப்பட்டுள்ளது. அதன் பிறகு சர்வே எண்ணுடன் விழா அனுமதி கடிதத்தை வெங்கடேசன் எம்.எல்.ஏ.,கலெக்டர், எஸ்.பி., ஆகியோருக்கு கொடுத்தார். வெங்கடேசன், விஜயகாந்த், பிரேமலா மூன்று பேர்களுக்குள் மட்டுமே இந்த ரகசியம் அடங்கிப் போனது.மாநில உளவு பிரிவு போலீசாரின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு மாநாட்டு இடத்தை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சுற்றி பார்த்த விஜயகாந்த்தின் இந்த ரகசிய பயணம் உளவு பிரிவு போலீசாருக்கு இன்னும் விளங்காத மர்மமாக உள்ளது.
![]()

