மார்ச் 04: ஆசிய கிண்ணப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வி அடைந்ததன் மூலம், இந்தியா கிட்டத்தட்ட வெளியேற வேண்டிய நிலையில் உள்ளது.
ஆசிய கிண்ணப் போட்டியின் முந்தயனால் ஆட்டத்தில் பாகிஸ்தான்- இந்தியா அணிகள் மோதின.
இதில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
தோல்வி குறித்து இந்திய அணியின் தற்காலிக அணித்தலைவர் வீராட் கோஹ்லி கூறுகையில்,
முக்கிய கட்டங்களில் நாங்கள் செய்த சிறிய தவறுகளால் ஆட்டத்தை இழந்துவிட்டோம், இந்த தவறுகளை இனி செய்ய மாட்டோம் என்று நம்புகிறோம்.
நாங்கள் இளம் வீரர்களை கொண்ட அணி, இதனால் தோல்விக்காக எங்களை யாரும் குற்றம் சாட்ட வேண்டாம்.
கடைசி 2 போட்டியில் நாங்கள் போராடி தான் தோற்றோம். எனது வீரர்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்.
நாங்கள் 20 முதல் 30 ஓட்டங்கள் குறைவாக எடுத்துவிட்டோம்.
இந்த தோல்வி எனக்கு அதிர்ச்சியை கொடுக்கவில்லை என்றும், இந்த போட்டி மூலம் எனக்கு நல்ல அனுபவம் கிடைத்தது எனவும் தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை போட்டியில் இதுவரை 7 ஆட்டம் முடிந்துள்ளன. பாகிஸ்தான் 2 வெற்றி, 1 தோல்வியுடன் 9 புள்ளி பெற்று உள்ளது.
இலங்கை அணி 3 வெற்றியுடன் 13 புள்ளியும், இந்தியா 1 வெற்றி 2 தோல்வியுடன் 4 புள்ளியும் பெற்றுள்ளன. ஆப்கானிஸ்தான் 1 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. வங்காள தேசம் தான் மோதிய 2 ஆட்டத்திலும் தோல்வி அடைந்தது.
இன்னும் 3 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. இன்று பாகிஸ்தான்– வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன., 5–ந்தேதி இந்தியா– ஆப்கானிஸ்தான், 6–ந்தேதி இலங்கை– வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.
புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இந்திய அணி கடைசி ஆட்டத்தில் ஆப்கானிஸ் தானை போனஸ் புள்ளியுடன் வெற்றி பெற வேண்டும். அப்படி நிகழ்ந்தால் 9 புள்ளியை எட்டும்.
அதே நேரத்தில் பாகிஸ்தான் கடைசி ஆட்டத்தில் வங்காளதேசத்திடம் தோற்க வேண்டும். இரு அணிகளும் தலா 9 புள்ளி பெற்றால் ரன்ரேட் கணக்கிடப்பட்டு ஒரு அணி இறுதி போட்டிக்கு முன்னேறும்.
![]()

