சென்னையில் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை ரூ.75 கோடி மதிப்பில் மேம்படுத்த முதல்வர் ஜெயலலிதா நிர்வாக ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இது குறித்து, தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: மீன்பிடிப் படகுகளை பாதுகாப்பான முறையில் நிறுத்தவும், மீன்பிடி கருவிகளை நல்ல முறையில் பராமரிக்கவும் போதிய இடவசதியின்மை காரணமாக மீனவர்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் மீன்பிடித் தளங்களை மீனவர்களின் நலனுக்காக தமிழக கடற்பகுதிகளில் மாநில அரசு அமைத்து வருகிறது.
காசிமேடு மீன்பிடித் துறைமுகம் என்றும் ராயபுரம் மீன்பிடித் துறைகமும் என்றும் அழைக்கப்படும் சென்னை மீன்பிடித் துறைமுகம் கடந்த 1984 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்தத் துறைமுகத்தில் 575 மீன்பிடிப் படகுகள் வரை நிறுத்துவதற்கு வசதியுள்ளது. இப்போது இந்த மீன்பிடி துறைமுகத்துக்கு வரும் மீன்பிடிப் படகுகளின் எண்ணிக்கை 1,395 ஆக உயர்ந்துள்ளது. மேலும், துறைமுகத்தில் கையாளப்படும் மீன்களின் அளவும் அதிகரித்துள்ளது. எனவே, அதிக எண்ணிக்கையுள்ள மீன்பிடிப் படகுகள் மற்றும் அதிகப்படியான மீன் வரத்தினை கையாள்வதற்கு ஏதுவாக, இந்தத் துறைமுகத்தினை ரூ.75 கோடி மதிப்பில் மேம்படுத்த நிர்வாக ஒப்புதல் வழங்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இந்தத் திட்டத்தின்படி, வடக்கு அலை தடுப்பு சுவரில் 300 மீட்டர் நீளத்தில் புதிய படகுத் துறை, கண்ணாடி நாரிழை படகுகள் நிறுத்துவதற்கு ஏற்ற வகையில் 200 மீட்டர் நீளத்துக்கு புதிய படகுதுறை, இப்போதுள்ள படகுத் துறையின் வடக்கு முனையில் 140 மீட்டர் நீளத்துக்கு நீட்டிப்பு செய்தல், 150 மீட்டர் நீளத்துக்கு இரண்டு புதிய துணைப் படகுத் துறைகள், 200 மீட்டர் நீளத்துக்கு இரண்டு புதிய துணைப் படகுத் துறைகள், இரண்டு புதிய வலை பழுது பார்க்கும் கூடங்கள் ஏற்படுத்தப்படும். இதன் மூலம், 12 ஆயிரம் மீனவர்கள் நேரடியாகவும், 15 ஆயிரம் மீனவர்கள் மற்றும் தொழிலாளர்கள் மறைமுகமாகவும் பயன்பெறுவார்கள் என்று தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]()

