kumar-vishwas

புதுடெல்லி: கேரளா நர்ஸ்கள் குறித்து தாம் தெரிவித்த கருத்துக்காக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் குமார் விஸ்வாஸ் மன்னிப்பு கோரியுள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டில், கேரள மாநில நர்சுகளை விமர்சித்து விஸ்வாஸ் தெரிவித்த கருத்து யூ டியூப்பில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கேரள நர்சுகள் கறுப்பு நிறத்தில் இருப்பதால்தான் நர்சுகளுக்கு சகோதரிகள் (சிஸ்டர்ஸ்) என்ற பெயர் வந்ததாகவும், வட இந்திய நர்சுகள் மிகவும் அழகாகவும் இருப்பதால் நோயாளிகளை தொடர்ந்து மருத்துவமனையிலேயே தங்கும்படி ஈர்த்து வருவதாகவும், அவர் கூறி இருந்தார்.

இந்நிலையில் விஸ்வாஸின் இனப்பாகுபாடு மற்றும் பாலியல் ரீதியான விமர்சனத்துக்கு கண்டனம் தெரிவித்து, கேரள முதல்வர் உம்மன்சாண்டி டெல்லி முதல்வர் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான கெஜ்ரிவாலுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அதில் கெஜ்ரிவாலும், குமார் விஸ்வாசும் மன்னிப்பு கேட்க வற்புறுத்தி இருக்கிறார். மேலும் பல்வேறு மகளிர் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன.

இதற்கிடையில், இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தை இளைஞர் காங்கிரசார் சூறையாடினார்கள். கேரளாவில் உள்ள பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் நாடு தழுவிய எதிர்ப்பால்,விஸ்வாஸ் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். யாரையும் காயபடுத்த வேண்டுமென்று இந்த கருத்தை தெரிவிக்கவில்லை என்றும், அது 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற காவி சம்மேளன் என்ற நிகழ்ச்சியில் நகைச்சுவைக்காக தெரிவிக்கப்பட்டது என்றும், இருப்பினும் இது யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் தாம் அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் கூறியுள்ளார்.

முன்னதாக மன்னிப்பு கேட்க மறுத்த விஸ்வாஸ், பாலிவுட் படங்களில் பலாத்கார காட்சிகளில் நடிக்கும் நடிகர் ராஜ்பப்பர் அதற்காக மன்னிப்பு கேட்பாரா? என்றும், அவர் முதலில் மன்னிப்பு கேட்டால், அதன்பின்னர் தாம் மன்னிப்பு கேட்பதாகவும் கூறியது குறிப்பிடத்தக்கது.

Loading