ஜூலை14, சென்னை: வேட்டி தமிழர்களின் ஆடை. மரபின் அழகிய வெளிப்பாடு. பாரம்பரியத்தின் அடையாளம். பெருமைமிக்க இந்த அடையாளத்தை தமிழகத்தில் அதுவும் குறிப்பாக தலைநகர் சென்னையில் அவமதிப்பது என்பது பாரம்பரிய அடையாளத்தின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் உளவியல் வன்முறை.
வேட்டியில் வருவதற்குத் தடை விதித்துள்ள சென்னை கிரிக்கெட் கிளப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வேட்டி, சட்டை அணிந்து நுழையும் போராட்டத்தை நடத்திய தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 40 பேர் கைது செய்யப்பட்டனர். வேட்டி சட்டையில் கிரிக்கெட் கிளப்புக்குச் சென்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் வக்கீல்கள் தடுக்கப்பட்ட செயல் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிரிக்கெட் கிளப்பின் அறுதப் பழசான வெள்ளைக்காரன் காலத்து விதிமுறைகளுக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் தலைவரும், வேட்டி தினத்தை தமிழகம் முழுவதும் அறிமுகப்படுத்தி, வேட்டியை தமிழர்கள் மத்தியில் உணர்வுமிக்க ஒரு ஆடை என்பதை நினைவூட்டிய பெருமைக்குரியவருமான சகாயம் ஐ.ஏ.எஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் கிளப்புக்குள் நடந்த பொது நிகழ்ச்சிக்கு சென்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஹரிபரந்தாமன் மற்றும் மூத்த வக்கீல்கள் காந்தி, ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் வேட்டி அணிந்து சென்றதால் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
வேட்டியில் வந்த ஒரே காரணத்திற்காக நீதிபதியையையும், மூத்த வக்கீல்களையுமே வெளியில் அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சி அலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுக்க சென்னை கிரிக்கெட் கிளப்பின் செயலுக்குக் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
இதற்கிடையே இந்த சம்பவத்தை கண்டிக்கும் வகையில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சேப்பாக்கம் கிரிக்கெட் சங்க கிளப்புக்குள் வேட்டி கட்டி நுழையும் போராட்டத்தை இன்று நடத்தினார்கள்.
![]()

