மு.க.அழகிரி விவகாரத்தில் திமுகவினரின் நாடகத்தை தேமுதிக நம்பத் தயராக இல்லை என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
மக்களவைத் தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க திமுக முனைப்பு காட்டி வரும் நிலையில், பிரேமலதா விஜயகாந்தின் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
உளுந்தூர்பேட்டை அருகே எறஞ்சியில் பிப்ரவரி 2-ம் தேதி தேமுதிக மாநில மாநாடு நடைபெறுகிறது. இதற்கான பணிகளை இன்று நேரில் பார்வையிட்ட பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, “தேமுதிக மாநாட்டுக்கு அனுமதி கேட்டு முறைப்படியாக மனு கொடுத்தோம். ஆனால் இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை. அதற்காக பயந்து பின்வாங்க மாட்டோம். அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இல்லையெனில், போராடி பெறும் வலிமை எங்களிடம் உள்ளது” என்றார்.
மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக அவர் கூறும்போது, “நாடாளுமன்றத் தேர்தல் குறித்து தேமுதிக தலைவரின் முடிவை இந்தியாவே எதிர்பார்த்து கொண்டுள்ளது. தொண்டர்களின் கருத்துக்களைக் கேட்டு, கூட்டணி குறித்து மாநாட்டில் முடிவு அறிவிக்கப்படும். எந்தத் தலைவரும் தொண்டர்களைக் கேட்டு முடிவெடுக்கப்படும் என சொல்லவில்லை. ஆனால், தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்” என்றார்.
மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடாதது ஏன் என்ற கேள்விக்கு, “மாநிலங்களவையில் ஓர் இடத்துக்கு தேமுதிக போட்டியிடுவதால் தமிழகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. எனவேதான் நாங்கள் வேட்பாளரை நிறுத்தவில்லை” என்று பதிலளித்தார்.
திமுகவில் இருந்து அழகிரி தற்காலிகமாக நீக்கப்பட்டது, அதன் தொடர்ச்சியான நிகழ்வுகள் குறித்து கூறும்போது, “கருணாநிதியும் அழகிரியும் வீட்டுக்குள் பேசவேண்டிய விஷயத்தை ஊடகங்கள் முன் பேசுகின்றனர். திமுகவின் கபட நாடகத்தை இதை நாங்கள் நம்ம்பத் தயாராக இல்லை.
எறஞ்சி கிராமத்தில் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு பந்தல் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. அதேநேரம் அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளால் மாநாடு நடைபெறுமா எனக் கேள்விக்குறி எழுந்துள்ளது.
தேமுதிக மாநாட்டுக்கு அனுமதி கேட்டுக் கடந்த 11-ம் தேதி விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அனுமதி அளித்தோ, அனுமதி மறுக்கப்பட்டதாகவோ எந்த பதிலும் தேமுதிகவுக்கு வரவில்லை. அப்படி தடை செய்யப்படுவதாக எழுத்துபூர்வமாகத் தெரிவித்தால், நீதிமன்றம் மூலம் அனுமதி பெற்றுவிடும் வாய்ப்பு உள்ளதால், இன்னமும் அரசு தரப்பில் பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
![]()

