திருப்பூர், ஏப்ரல் 11: தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையோரம் இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்த கடைகளை கிராமப்புறங்களில் அமைக்க டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்டத்தில் ஆங்காங்கே போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடை அவசர அவசரமாக திறக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்றது. இந்நிலையில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் நடத்தியவர்களுடன் பேசிய அதிகாரிகள் கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர் என கூறப்படுகிறது. இதனையடுத்தும் போராட்டம் நடந்ததால் பொதுமக்கள் மீது தடியடி நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதால் அதனை கண்டித்து காவலர்கள் மீது மக்கள் கல்வீசியதாகவும் கூறப்படுகிறது.
போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை ஓட ஓட அடித்து விரட்டுகின்றனர். சில பெண்கள் நாங்கள் அமைதியான முறையில்தான் போராட்டம் நடத்துகிறோம், கடையை அகற்ற வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை எங்களை ஏன் இப்படி அடிக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினர். இருப்பினும் போலீசார் போராட்டக்காரர்களை அடித்து விரட்டினர். இச்சம்பவத்தினால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.
போலீஸ் தடியடியில் ஒருவருக்கு மண்டை உடைந்து இரத்தம் கொட்டியது , அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு உள்ளார். கடை மூடப்படும் என அதிகாரிகளோ, எம்.எல்.ஏ.வோ எந்தஒரு உத்தரவாதத்தையும் தரவில்லை என பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
![]()

