modi

ஜூலை10, இந்திய திருநாட்டின் 16வது பிரதமராக பொறுப்பேற்று இருக்கும் நரேந்திர மோடி அரசின் முதல் பொது பட்ஜெட் இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதில் மக்களைக் கவரும் சலுகைகளா அல்லது பொருளாதாரத்துக்கு உத்வேகம் அளிக்கும் சீர்திருத்தங்களா, இவற்றில் எதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதல் பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று (10.07.14) தாக்கல் செய்கிறார்.

மாதச் சம்பளம் பெறுவோருக்கு தற்போதுள்ள வருமான வரி உச்ச வரம்பு ரூ.2 லட்சத்தை ரூ.5 லட்சம் வரை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக எழுப்பப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்திலும் நிதி அமைச்சர் பொருத்தமானதொரு அறிவிப்பை வெளியிடுவார் என்று நடுத்தர மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அதிகரித்து வந்த நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைத் தடுப்பதற்காக தங்க இறக்குமதி மீது கடந்த ஆண்டு உயர்த்தப்பட்ட வரிகளைக் குறைப்பது குறித்தும் இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பாண்டில் பருவமழையின் அளவு குறைந்துள்ளதால் வேளாண் உற்பத்தி குறைய வாய்ப்பிருப்பதை முன்னிட்டு அதன் விளைவுகளைச் சமாளிப்பதற்காக விவசாயிகளுக்கு நிவாரணம் தரும் அறிவிப்புகளையும் நிதியமைச்சர் பட்ஜெட்டில் வெளியிடுவார் என்று தெரிகிறது. அவற்றில் ஒரு நடவடிக்கையாக, பாஜகவின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தபடி வேளாண் விலை நிலைப்படுத்துதல் நிதி ஒன்றை மத்திய அரசு அமைக்க வாய்ப்புள்ளது.

பொருள்கள் மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) நாடு முழுவதும் சீராக அமல்படுத்துவதற்காக செயல்திட்டமும் அறிவிக்கப்படலாம். எனினும், புதன்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் இடம்பெற்ற நேரடி வரி விதிப்புக்கான விதிமுறைகள் தொடர்பாக நிதி அமைச்சரின் அணுகுமுறை என்னவாக இருக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

பணவீக்கத்தால் பாதிக்கப்பட்ட சாமானிய மனிதனுக்கு நிவாரணம் தருவதாக வாக்குறுதி அளித்தே பாஜக மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. எனினும், நிதி விவகாரங்களில் எதிர்காலம் பற்றிய எச்சரிக்கை உணர்வுடன் கூடிய பாதையையே அருண் ஜேட்லி பின்பற்றுவார் என்றும் ஜனரஞ்சகம் என்ற பெயரில் அதில் சமரசம் செய்து கொள்ள மாட்டார் என்றும் கூறப்படுகிறது.

Loading