ஜூன் 22, நில மோசடி புகார் தொடர்பான வழக்கில், நடிகர் வாகை சந்திரசேகர் உள்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஈரோட்டைச் சேர்ந்தவர் கௌசல்யா. தனியார் கல்லூரியில் துணைப் பேராசிரியையாக பணிபுரிந்து வரும் இவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளது:
எனது தந்தை குமரவேல், சுகாதாரத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகில் உள்ள மாலையக்கவுண்டன்பட்டியில், அவருக்குச் சொந்தமான 3.15 ஏக்கர் நிலம் இருந்தது. அதில் நெடுஞ்சாலை அமைக்கும் பணிகளுக்காக 18 சென்ட் நிலம் கொடுக்கப்பட்டது. மீதமுள்ள 2.97 ஏக்கர் நிலத்தை எனக்கும், சகோதரிகள் வித்யா, ரம்யா ஆகியோர் பெயரிலும் மாற்றிக் கொடுத்தார்.
அந்த நிலத்தை சிலர் விலைக்கு கேட்டனர். நாங்கள் கொடுக்கவில்லை. இதனால் திமுக செயற்குழு உறுப்பினரும், நடிகருமான வாகை சந்திரசேகர், அவரது மனைவி ஜெகதீஸ்வரி மற்றும் பலரும் கூட்டாகச் சேர்ந்து, போலி ஆவணம் தயார் செய்து, பகீரதன் என்பவருக்கு அந்த நிலத்தை விற்பனை செய்துள்ளனர்.
நிலக்கோட்டை சார்-பதிவாளர் அலுவலகத்தில் அவர்கள் பதிவு செய்தபோது, நாங்கள் எதிர்ப்புத் தெரிவித்தோம். அதனால் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த அவர்கள், தகாத வார்த்தைகளால் எச்சரித்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், இதுகுறித்து விசாரணை நடத்த திண்டுக்கல் நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டது. அதன்பேரில், சார்பு ஆய்வாளர் சத்தியநாதன், நடிகர் வாகை சந்திரசேகர் உள்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார். அதில் சுப்பம்மாள், பாப்பம்மாள், பத்திர எழுத்தர் முருகபாண்டி ஆகிய 3 பேரை, போலீஸார் கைது செய்துள்ளனர்.
![]()

