பெண்களின் உடையும், நடத்தையுமே பாலியல் குற்றங்களுக்கு காரணம் என்று கூறியதற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆஷா மிரிஜே மன்னிப்பு கோரியுள்ளார். இவர் மகாராஷ்டிரா மாநிலத்தின் மகளிர் ஆணையத்தின் உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.
நாக்பூரில் செவ்வாய்க்கிழமை நடந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், கடந்த 2012ஆம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவியும், மும்பையில் பெண் பத்திரிகையாளரும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவங்களை குறிப்பிட்ட அவர், பெண்களின் உடையும், நடத்தையும் கூட பாலியல் குற்றங்கள் அதிகரிக்க காரணம் என்று தெரிவித்தார். மருத்துவ மாணவி இரவு 11 மணிக்கு நண்பருடன் திரைப்படத்திற்கு ஏன் செல்ல வேண்டும். மும்பையில் பெண் பத்திரிகையாளர் சக்த் மில் வளாகத்திற்குள் எதற்காக தனியாக செல்ல வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் ஒருவரே, பாலியல் குற்றங்கள் அதிகரிக்க பெண்களும் காரணம் என்று தெரிவித்ததால், அரசியல் கட்சியினர் உட்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மூன்று முறைகளைப் பெண்கள் பேண வேண்டும். ஒழுக்கமான ஆடைகளை அணிந்து உடலை மறைக்க வேண்டும். நாம் யாருடன் செல்கிறோம், எந்த நேரத்தில் செல்கிறோம் என்பதை கவனமாக முடிவு செய்ய வேண்டும். இவை தவறினால் நாமே (பெண்கள்) அதற்கான குற்றத்தை அழைப்பவராக மாறி விடுகிறோம். இதனைத் தவிர்க்க வேண்டும் என்றார் ஆஷா மிரிஜே.
![]()

