மார்ச் 12, வீரப்பன் கூட்டாளிகள் நால்வர் உட்பட 15 பேரின் மரண தண்டனை ரத்துக்கு எதிரான மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
வெவ்வேறு வழக்குகளில் சந்தன கடத்தல் வீரப்பன் கூட்டாளிகள் 4 பேர் உட்பட மொத்தம் 15 பேருக்கு விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்திருந்தது. இப்படி தூக்கு தண்டனை விதிக்கப்பட்டோர் தங்களது தண்டனையை ரத்து செய்யக் கோரி ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினர். ஆனால் அந்த கருணை மனுக்கள் மீது முடிவு எடுப்பதற்கு பல ஆண்டுகள் தாமதம் ஆயின. பல ஆண்டுகால தாமதத்துக்குப் பின்னர் அவர்களின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதை காரணம் காட்டி தங்களது தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி 15 பேரும் உச்ச நீதிமன்றத்தில் வெவ்வேறு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இம்மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த ஜனவரி 21ந் தேதி அதிரடியாக தீர்ப்பு வழங்கியது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்டோரின் கருணை மனுக்கள் மீது முடிவு எடுப்பதில் நீண்ட காலதாமதம் ஏற்பட்டுள்ளது.இதனால், தாங்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகி தினம் தினம் செத்து செத்து பிழைப்பதாக குறிப்பிட்டிருந்தனர். இந்த வாதத்தை ஏற்ற உச்ச நீதிமன்றம், நீண்ட காலதாமதம் ஏற்பட்டற்கு தகுந்த காரணத்தை மத்திய அரசு தெரிவிக்காததால், 15 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாககுறைத்து தீர்ப்பு வழங்கியது. நாடு முழுவதும் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் இந்த தீர்ப்பை வரவேற்றனர். ஆனால் மத்திய அரசோ உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில், கருணை மனுக்களை பரிசீலிப்பதில் ஏற்படும் நீண்ட தாமதத்தை காரணம் காட்டி தூக்கு கைதிகளின் தண்டனையை ஆயுளாக குறைப்பது சட்ட விரோதமானது. இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும். கொடூர கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு, கருணை மனு மீது முடிவு எடுப்பதில் ஏற்பட்ட கால தாமதத்தை காரணமாக காட்டி ஆயுள் தண்டனையாக குறைக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. இம்மனு மீது தொடர்ந்து விசாரணை நடத்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்ச், மத்திய அரசின் மறுசீராய்வு மனுவை இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனால் ராஜிவ் காந்தி வழக்கில் தூக்கு தண்டனை அனுபவித்த பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது தூக்கை ரத்து செய்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்க்கும் மத்திய அரசின் மனுவும் தள்ளுபடியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
![]()

