இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து அணி 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா– நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி ஹேமில்டனில் இந்திய நேரப்படி இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கியது.
இந்த போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை, முதல் போட்டியில் விளையாடிய வீரர்களே இடம் பெற்றனர்.
நியூசிலாந்து அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டு இருந்தது, காயம் அடைந்த வேகப்பந்து வீரர் மிலினுக்கு பதிலாக மில்ஸ் இடம் பெற்றார்.
இப்போட்டியில் டொஸ் வென்ற இந்திய அணியின் அணித்தலைவர் டோனி பந்துவீச முடிவு செய்தார்.
இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் சொதப்பல் தொடக்கம் கொடுத்தனர், ரைடர் 20 ஓட்டங்கள் எடுத்திருந்த போது சமியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
பின் இணைந்த குப்தில்- வில்லியம்சன் ஜோடி இந்திய வீரர்களின் பந்து வீச்சை பதம் பார்த்தது, இதற்கிடையே மழை குறுக்கிட்டதால் 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி 42 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 271 ஓட்டங்கள் எடுத்தது.
டக்வொர்த்லீவிஸ் முறைப்படி இந்திய அணிக்கு 293 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதன்பின் களமிறங்கிய இந்திய அணி முதலில் நிதானித்து விளையாடினாலும் பின்னர் மளமளவென விக்கெட்டுகளை இழந்தது.
41.3 ஓவரில் மழை மீண்டும் குறுக்கிட்டது, அப்போது 9 விக்கெட் இழப்பிற்கு 277 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்ததால் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதன் மூலம் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது.
இரண்டாவது ஒருநாள் போட்டியில் தோல்வி அடைந்ததால், தரவரிசையில் நம்பர் 1 இடத்தை இந்தியா இழந்தது.
இதனையடுத்து சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்தியா 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது, அவுஸ்திரேலியா அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான எஞ்சிய 3 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றால் மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது.
![]()

