ஏப்ரல் 03, விஷால்-லட்சுமி மேனன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘நான் சிகப்பு மனிதன்’. இப்படத்தை திரு இயக்கியிருக்கிறார். இப்படம் ஏப்ரல் 11ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இப்படம் திரைக்கு வருவதை முன்னிட்டு பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது.
இதில் விஷால், லட்சுமி மேனன், இனியா, இயக்குனர் திரு, யுடிவி தனஞ்செயன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். அப்போது விஷால் பத்திரிக்கையாளர்களுக்கு முத்தக் காட்சிப்பற்றி பதில் அளித்தார்.
அப்போது, “இப்படத்தில் நானும் லட்சுமிமேனனும் இடம்பெறும் முத்தக்காட்சி, ஜேம்ஸ் பாண்ட் படங்களில் இடம்பெறும் முத்தக்காட்சிப் போன்று கிடையாது. இது பரபரப்பாக பேசக்கூடிய அளவுக்கு பெரிய விசயம் இல்லை. படத்தில் ஒரு செகண்ட் மட்டுமே வரக்கூடிய காட்சி. அதுவும் இக்காட்சி ஒரே டேக்கில் எடுக்கப்பட்டது. கதைக்கு தேவைப்பட்ட காரணத்தாலேயே இக்காட்சி வைக்கப்பட்டது” என்றார் விஷால்.
தணிக்கைக் குழு இப்படத்திற்கு ‘யுஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. மீண்டும் இப்படத்தை தணிக்கைக் குழுவுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம். ‘யு’ சான்றிதழ் வாங்க முயற்சி செய்கிறோம். அவர்கள் கேட்டுக் கொண்டால் படத்தில் தேவையற்ற காட்சிகள் நீக்கப்படும் என்றும் விஷால் கூறினார்.
மேலும் இப்படம் ஆரம்பிக்கும்போது ஏப்ரல் 11-ல் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து எடுக்கப்பட்டது. இப்படத்தின் இசையும், படமும் நன்றாக வந்திருக்கிறது. இதற்கு இசையமைப்பாளருக்கும் இயக்குனருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் விஷால் குறிப்பிட்டார்.
இப்படம் பற்றி இயக்குனர் கூறும்போது, “நான் சிகப்பு மனிதன் தலைப்பில் ஏற்கனவே ரஜினி நடித்துள்ளார். அதே தலைப்பில் வெளியாகும் இப்படம், தலைப்பை மட்டுமே பயன்படுத்தி புதிய கதையோடு களமிறங்கியிருக்கிறோம். ரசிகர்களுக்கு விருந்தாகவும் இப்படம் அமையும்” என்றார்.
![]()

