பிப்ரவரி 24: டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் அர்னாப் கோஸ்சாமியை வசமாக ஒரு பிடி பிடித்து ஒரே நாளில் தேசம் முழுவதையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் ஒரு தமிழர். அவர் திருமுருகன் காந்தி. மே 17 இயக்கத்தின் தலைவர்.
ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தண்டனை ஆயுளாகக் குறைக்கப்பட்டது மற்றும் அவர்கள் உள்பட சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது ஆகியவைதான் இன்று வட இந்திய ஊடகங்களால் பிரதானமாக பரப்புரை செய்யப்படுகின்றன.
உச்ச நீதிமன்றத்தின் தூக்கு தண்டனை ரத்து தீர்ப்பை மிகக் கேவலமாக விமர்சித்துள்ளன டைம்ஸ் நவ் மற்றும் சிஎன்என் ஐபிஎன் ஆகியவை. குறிப்பாக அர்னாப் போடும் கூச்சல் சகிக்க முடியாதது. ‘என் நாட்டு பிரதமரைக் கொன்றவர்களின் தூக்கு தண்டனையை எப்படி ரத்து செய்யலாம்’ என்று மாரிலடித்துக் கொண்டு கேட்கிறார் அர்னாப். இது பச்சையான நீதிமன்ற அவமதிப்பு.
ஒரு பத்திரிகையாளனுக்கு இருக்க வேண்டிய குறைந்தபட்ச நடுநிலைத் தன்மையே இல்லாத விவாதம் இது என மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி உள்ளிட்டோர் தலையிலடித்துக் கொள்ளும் அளவுக்குப் போய்க் கொண்டிருக்கின்றன இந்த விவாதங்கள்.
பொதுவாக இம்மாதிரி விவாதங்களில் பங்கேற்போரை முழுமையாகப் பேசவிட்டு, அவர்கள் சொல்ல வரும் கருத்துக்களைப் பெற்று, தேவையான இடத்தில் நிறுத்தி- மாற்றுக் கருத்து சொல்பவரைப் பேசவிடுவதுதான் நிகழ்ச்சி நடத்துபவர்களின் வேலை.
ஆனால் அர்னாப் மற்றும் ராஜ்தீப் சர்தேசாய்கள் நிகழ்ச்சியின் ஆரம்பம் முதல் இறுதி வரை கத்திக் கொண்டே இருக்கிறார்கள். பேச வந்தவர்கள் தங்களின் கருத்துக்களை அப்படியே ஏற்க வேண்டும் என்கிற மாதிரி இருக்கிறது இவர்கள் நடத்தை. இதன் விளைவு, அது விவாதக் களமாக இல்லாமல் குழாயடிச் சண்டை நடக்கும் இடமாகவே காட்சி தருகிறது. நேற்றைய ஒரு விவாதத்தில், அர்னாப் கோஸ்சாமியின் பேச்சைப் பொறுக்க முடியாமல், விவாதத்திலிருந்தே வெளியேறினார் ராம் ஜெத்மலானி.
ஆனால் அந்த அர்னாபையே அலற வைத்த ஒருவர் அவர்தான் மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி. அவர் கேட்ட எந்த கேள்விக்கும் அர்னாபிடம் விடையில்லை. கடைசியில் திருமுருகனைச் சமாளிக்க முடியாமல், அவர் மைக்கை ஆஃப் பண்ண மட்டும்தான் முடிந்தது அர்னாப்பால்.
அர்னாப்புக்கு கொஞ்சமும் குறையாத ராஜ்தீப் சர்தேசாயையும் விட்டு வைக்கவில்லை திருமுருகன் காந்தி. அவரிடமும் சந்திராசாமி, சுப்பிரமணிய சாமியை விட்டுவிட்டு, அப்பாவிகளை போட்டு வதைப்பது ஏன் என கேட்டு திணறடித்தார் திருமுருகன் காந்தி. ஒரு தமிழ்த் தொலைக்காட்சியில் ஜெயின் கமிஷன் விவகாரத்தை சுப.வீரபாண்டியன் கிளப்பியபோது உடன் விவாதத்தில் இருந்த சுப்பிரமணிய சுவாமி பாதியிலேயே கிளம்பிச் சென்றது நினைவுகூறத்தக்கது.
![]()

