panruti-ramachandran

மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்வேன் என அண்மையில் தேமுதிகவிலிருந்து விலகிய மூத்த அரசியல் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்து அறிஞர் அண்ணா விருதினை பெற்றுக் கொண்ட பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அண்ணா விருது கிடைத்துள்ளதால் இதற்கு அரசியல் சாயம் பூசுவார்கள் என்று கருதுகிறீர்களா என்ற கேல்விக்கு பதில் கூறிய அவர், எதற்கும் அரசியல் சாயம் பூசத்தான் செய்வார்கள். பேரறிஞர் அண்ணா எல்லோருக்கும் பொதுவானவர். அவரது வழியில் அரசியல் நடத்திய எனக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் கூறுகையில், மக்களவைத் தேர்தலில் முற்போக்குக் கூட்டணியை ஆதரிக்க வேண்டும். அதை குறிக்கோளாகக் கொண்டு இயங்க வேண்டும் என்று அண்ணா ஏற்கனவே கூறியுள்ளார். அந்த வகையில் தமிழகத்தில் அதிமுக, இடதுசாரிக் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளது. அந்த கூட்டணி கட்சிகள் முற்போக்கு கொள்கைக்காக பாடுபடுகிறது. யார் நல்ல கொள்கைகளை கொண்டு வருகிறார்களோ அவர்களை ஆதரிக்க வேண்டும்.

இந்திய அரசியலில் ஒரு மாற்றம் உருவாகக் கூடிய சூழ்நிலை உள்ளது. தேசிய அளவில் அண்ணாவின் முற்போக்குக் கொள்கை ஏற்பட என்னால் முடிந்த ஆதரவு உண்டு. எண்ணை சட்டியில் இருந்து தப்பிக்க எரி நெருப்பில் விழுந்த கதையாக ஆகி விடக் கூடாது. எனவே ஏழை எளிய மக்களுக்காக யார் பாடு படுகிறார்களோ அவர்களை ஆதரிக்க அனைவரும் முன் வரவேண்டும். இந்திய அரசியலில் நல்ல மாற்றம் அமைய வேண்டும் என்றார்.

Loading