modi-ame

ஜூன் 22, அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்ற பிரதமர் நரேந்திர மோடியை அழைக்க வேண்டும் என்று அந்நாட்டு எம்.பி.க்கள், பிரதிநிதிகள் சபைத் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக கலிபோர்னியா மாகாண குடியரசுக் கட்சி உறுப்பினரும், அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் வெளியுறவு விவகாரங்களுக்கான குழுவின் தலைவருமான எட் ராய்ஸ், அந்தச் சபையின் தலைவர் ஜான் போனெருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

அமெரிக்காவுக்கு செப்டம்பர் மாதம் வருகை தரும் மோடியை, பிரதிநிதிகள் மற்றும் செனட் சபையின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற வருமாறு அழைக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த வடக்கு கரோலினா மாகாண பிரதிநிதிகள் சபை உறுப்பினர் ஜார்ஜ் ஹோல்டிங்கும் கையெழுத்திட்டுள்ளார்.

அந்தக் கடிதத்துக்கு பிரதிநிதிகள் சபையின் தலைவர் ஜான் போனெர் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை என்று அமெரிக்காவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குஜராத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு நேரிட்ட கலவரத்தை தொடர்ந்து அப்போது அந்த மாநில முதல்வராக இருந்த நரேந்திர மோடிக்கு விசா வழங்குவதற்கு அமெரிக்கா தடை விதித்தது.

12 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் தடை நீடித்த நிலையில், மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இதையடுத்து மோடியை தொடர்பு கொண்டு அமெரிக்காவுக்கு வருமாறு அந்நாட்டு அதிபர் ஒபாமா அழைப்பு விடுத்ததால் தடை முடிவுக்கு வந்தது.

Loading