பிப்ரவரி 27: ராஜீவ் கொலைகுற்றவாளிகள் 7 பேர் விடுதலைக்கு தடை விதிக்கும் காங்கிரசை எதிர்த்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகள், பல்வேறு இயக்கங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை சத்யமூர்த்தி பவனை நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட வந்தனர். சாலையில் காங்கிரஸ் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அந்த போஸ்டரின் மீது நாம் தமிழர் கட்சியினர் சத்திய மூர்த்தி பவனை இன்று முற்றுகையிடப் போவதாக போஸ்டர் ஒட்டினார்கள்.
இதைப் பார்த்து ஆவேசமடைந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கராத்தே தியாகராஜன், ரங்கபாஷ்யம், ஹரி கிருஷ்ண ரெட்டி, அகரம் கோபி, கொளத்தூர் கோபால், எஸ்.எம்.குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், நாம் தமிழர் கட்சியினருக்கு பதிலடி கொடுப்பதற்கு சத்திய மூர்த்தி பவன் முன்பு குவிந்தனர்.
அண்ணாசாலையும் ஜி.பி.ரோடும் இணையும் இடத்தில் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை அறிவுச் செல்வன் தலைமையில் தொண்டர்கள் திரண்டனர். அவர்கள் சத்திய மூர்த்தி பவனை நோக்கி செல்கையில், அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
இதனால் நாம் தமிழர் கட்சியினர், அங்கேயே சோனியாகாந்தியின் உருவபொம்மையை எரித்து, காங்கிரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் அண்ணாசாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
![]()

