ஜூன் 24, தஞ்சை மாவட்டம் சோறுடைத்த சோழநாடு என்பது எல்லோருக்கும் தெரியும். தற்போது இந்த நெற்களஞ்சியத்தில் முன் காலந்தொட்டே நடந்துவரும் வெற்றிலை விவசாயமும் பெயரெடுத்து வருகிறது. ஆனாலும் சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளில் வெற்றிலை ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் சிறிது பின்தங்கியுள்ளது.
ஆகவே இந்த தடையை நீக்கி ஏற்றுமதிக்கு தமிழக முதல்வர் முயற்சி எடுக்க வேண்டும் என திருவையாறு பகுதி வெற்றிலை கொடிக்கால் சாகுபடியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் திருவையாறு வட்டார வெற்றிலை சாகுபடியாளர்கள் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையனிடம் அளித்த மனு:
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு, பாபநாசம் பகுதிகளில் அதிகளவு வெற்றிலை பயிரிடப்படுகிறது. வெற்றிலை சாகுபடியை அரசின் கடன் உதவி இல்லாமல் 95 சதவீதம் இயற்கை முறையில் சாகுபடி செய்து வருகிறோம். இதன்மூலம் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் மாம்பழத்துக்கு அடுத்தபடியாக வெற்றிலை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெற்றிலை சாகுபடியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகையால் இப்பிரச்னையில் தமிழக முதல்வர் தலையிட்டு, மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்று, வெற்றிலை ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்.
![]()

