இலங்கை வடக்கு மாகாணத்தில் ராணுவம் குறைக்கப்பட்டுள்ளதாக அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
இலங்கை யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் புற்றுநோய் ஆஸ்பத்திரி திறப்பு விழா நடந்தது. அதில், அதிபர் ராஜபக்சே கலந்து கொண்டு ஆஸ்பத்திரியை திறந்து வைத்தார்.
மேலும், உயர்ரக கதிர்வீச்சு பிரிவு கட்டிடத்துக்கான அடிக்கல்லையும் அவர் நாட்டினார். விழாவில் அதிபர் ராஜபக்சே பேசும் போது கூறியதாவது:–
நாட்டின் பாதுகாப்புக்கு நாடு முழுவதும் ராணுவம் இருக்க வேண்டும். ஒரு இனத்தால் மற்றொரு இனத்தை அடிமைப்படுத்த முடியாது. வடக்கு மாகாணத்தில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச நாடுகள் கூறுகின்றன.
ஆனால் இன்று இங்கு 10–க்கும் குறைவான ராணுவ முகாம்களே உள்ளன. இப்பகுதியில் முன்பு 30 ஆயிரம் ராணுவ வீரர்கள் முகாமிட்டிருந்தனர். இன்று அது 12 ஆயிரம் ஆக குறைக்கப்பட்டுள்ளது.
தேவேந்திர முனையில் இருந்து பருத்தித்துறை வரை மக்கள் சுதந்திரமாக பயணம் செய்ய முடியும். அதனால் நாட்டு மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
தெல்லிப்புழையில் கட்டப்பட்டுள்ள புற்று நோய் ஆஸ்பத்திரி ‘கலர்ஸ் ஒவ் கரேஜ்’ அமைப்பின் ஏற்பாட்டில் கட்டப்பட்டது. இது ரூ.30 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.
![]()

