mettur

ஜூலை19, கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில், கனமழை நீடிப்பதால், நீர்வரத்து அதிகரித்து, கர்நாடகாவில் உள்ள கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில் இருந்து, 32,500 கனஅடி நீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால், வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில், சுற்றுலா பயணிகள் குளிக்க, தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கர்நாடகா மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. கர்நாடகாவில், காவிரியின் குறுக்கே உள்ள கபினி, கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட முக்கிய அணைகள், முழு கொள்ளளவை எட்ட உள்ளன.பாதுகாப்பு கருதி, இவ்வணைகளில் இருந்து, 18 ஆயிரம் கனஅடி நீர், காவிரியில் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால், தமிழக எல்லையான பிலிகுண்டுவில், நேற்று முன்தினம் பிற்பகல் முதல், நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. நேற்று முன்தினம், மாலை 3:00 மணி, நிலவரப்படி, பிலிகுண்டுவில், வினாடிக்கு, 5,000 கனஅடியாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து, இரவு 10:00 மணி, நிலவரப்படி, 10 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது.இது, மேலும் படிப்படியாக அதிகரித்து வந்தது. நேற்று காலை, 8:00 மணிக்கு,

பிலிகுண்டுலுவில், வினாடிக்கு, 20 ஆயிரம் கனஅடி நீர், தமிழகத்துக்கு வந்தது. இதனால், ஒகேனக்கலில் அருவிக்கு செல்லும் நடைபாதையை, காவிரி நீர் தொட்டுச் சென்றது.

இதையடுத்து, சுற்றுலாபயணிகளின் நலன் கருதி, வருவாய்த் துறையினர், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் பயணத்திற்கும், நேற்று காலை, 10:00 மணி முதல், தடை விதித்து உத்தரவிட்டனர். தீயணைப்புத் துறை மற்றும் போலீசார், ஒகேனக்கல்லில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.நேற்று முன்தினம், வினாடிக்கு, 10 ஆயிரம் கனஅடியாக இருந்த, கபினி உபரிநீர் திறப்பு, நேற்று, வினாடிக்கு, 22 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. அணை நிரம்பியதால், வரும் உபரிநீர், முழுமையாக காவிரியில் வெளியேற்றப்படுகிறது. கே.ஆர்.எஸ்., அணைக்கு, நீர்வரத்து, வினாடிக்கு, 27,500 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து, வினாடிக்கு, 10,500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. நீர்வரத்தில் இதே நிலை நீடித்தால், கே.ஆர்.எஸ்., அணை, ஒரு வாரத்தில் நிரம்ப வாய்ப்புஉள்ளது.கபினியில் திறந்த உபரிநீர் வந்து சேர்ந்ததால், நேற்று முன்தினம், வினாடிக்கு,

1,000 கனஅடியாக இருந்த, மேட்டூர் அணை நீர்வரத்து, நேற்று காலை, வினாடிக்கு, 4,354 கனஅடியாக அதிகரித்தது. இதனால், அணை நீர்மட்டம், நேற்று, 48 அடியாக அதிகரித்தது.நேற்று, கே.ஆர்.எஸ்., மற்றும் கபினி அணைகளில் இருந்து, வினாடிக்கு, 32,500 கனஅடி நீர், காவிரியில் திறக்கப்பட்டு உள்ளது. இதனால், இரு நாட்களில், மேட்டூர் அணை நீர்மட்டம், மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

Loading