army 

இந்திய ராணுவத்துக்கு ரூ.21,000 கோடி மதிப்பீட்டில் அதி நவீன “துருவ்’ ஹெலிகாப்டர்கள், ரோந்துக் கப்பல்கள் உள்ளிட்ட தளவாடங்களைக் கொள்முதல் செய்வது தொடர்பான திட்டங்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை ஒப்புதல் அளித்தது.

மேலும், விமானப் படைக்கு பொருள்களை எடுத்துச் செல்வதற்குப் பயன்படுத்தப்படும் போக்குவரத்து விமானங்களை இந்தியாவைச் சேர்ந்த தனியார் நிறுவனங்கள் தயாரித்து வழங்குவதற்கும் பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி அளித்தது.

பாதுகாப்புத் துறை அமைச்சராக அருண் ஜேட்லி பொறுப்பேற்ற பிறகு, தில்லியில் அவரது தலைமையில் முதல்முறையாக பாதுகாப்பு
அமைச்சக ஆயுதக் கொள்முதல் கவுன்சில் (டி.ஏ.சி.) கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அருண் ஜேட்லி கூறியதாவது:

கடற்படைக்கு தலா 16 ஹெலிகாப்டர்கள் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்க அனுமதி.

இந்தியக் கடலோரப் பாதுகாப்புப் படைக்கு ரூ.2,360 கோடியில் 5 அதிவிரைவு ரோந்துக் கப்பல்கள், சிறிய ரக ரோந்துக் கப்பல்கள் வாங்குவதற்கும் ஒப்புதல்.

போர்க் கப்பல்களுக்கு அரணாகச் செல்லும் 5 துணைக் கப்பல்களை ரு.9,000 கோடியில் வாங்குவதற்கும் அனுமதி.

முப்படைகளுக்கும் தேடுதல், மீட்புப் பணிகளுக்காக ரூ.900 கோடியில் சாதனங்களை வாங்குவதற்கும் அனுமதி.

மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்றதும் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா தனது ராணுவத் தளவாடங்கள் தேவையில் 70 சதவீதத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதைச் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலை தவிர்க்கப்பட்டு, இந்தியாவிலேயே ராணுவத் தளவாடங்களைத் தயாரிக்கும் நிலை ஏற்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தார். மேலும், பாதுகாப்பு ஆயுதத் தளவாட உற்பத்தித் துறையில் 26 சதவீதமாக இருந்த அன்னிய நேரடி முதலீட்டு உச்சவரம்பு மோடி அரசு பதவியேற்றதும் 49 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது.

 

Loading