சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கலவரம் நடந்த லிட்டில் இந்தியா பகுதியில் சட்டம் ஒழுங்கை கடுமையாக்க, போலீசுக்கு அதிக அதிகாரம் அளிக்கும் மசோதா பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் பொது இடங்களில் மது அருந்த கடும் கட்டுப்பாடுகளை நாடு முழுவதும் அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.சிங்கப்பூரில் உள்ள லிட்டில் இந்தியா பகுதி மிகவும் பிரபலமானது. இங்கு இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்பட தெற்காசிய நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் அதிகமாக வசிக்கின்றனர். கடந்த டிசம்பர் மாதம் 8ம் தேதி இங்கு நடந்த ஒரு சாலை விபத்தில், தமிழகத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் இறந்தார். இதையடுத்து பெரும் கலவரம் ஏற்பட்டது. இதில் போலீஸ் கார்கள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டன.
தமிழர்கள் உள்பட பலர் வன்முறையில் ஈடுபட்டதால் 39 போலீசார் படுகாயம் அடைந்தனர்.சிங்கப்பூரில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கலவரம் ஏற்பட்டதால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்தன. இந்நிலையில், கலவரத்தில் ஈடுபட்டதாக 56 இந்தியர்களை சிங்கப்பூர் அரசு நாடு கடத்தியது. பலர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், லிட்டில் இந்தியா பகுதியில் மீண்டும் கலவரம் நடக்காமல் தடுக்கவும், சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தவும் போலீசுக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையில் புதிய மசோதா ஒன்று பார்லிமென்டில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.அதன்படி, லிட்டில் இந்தியா பகுதியில் எந்த வர்த்தக நிறுவனத்திலும் திடீரென ரெய்டு நடத்தவும், தேவைப்பட்டால் லைசென்சை ரத்து செய்யவும் போலீசுக்கு அதிகாரம் அளிக்கப்படும்.
மேலும், சந்தேகப்படும் யாரையும் விசாரணை நடத்த முடியும். பொது மக்கள் நடமாட்டம் மற்றும் மது அருந்துவதற்கான கட்டுப்பாடுகளையும் போலீசார் விதிக்க முடியும். மேலும், பொது இடங்களில் மது அருந்தவும், விற்பனைக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று உள்துறை அமைச்சரும் துணை பிரதமருமான டியோ சீ ஹீன் தெரிவித்துள்ளார்.இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் ஓராண்டுக்கு சட்டம் அமலில் இருக்கும். அதற்குள் லிட்டில் இந்தியா பகுதியில் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த முடியும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். தேவைப்பட்டால் இந்த சட்டத்தை நிரந்தரமாக அமல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
![]()

