Siddaramaiah

கோவை: காவிரிநீர் பிரச்னை தொடர்பாக இரு மாநில மக்களின் மோதல், வருங்காலங்களில் நடக்காது என கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா பேசினார்.கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகரில் 1400 ஏக்கர் பரப்பில் தொழில் மண்டலம் அமைக்கப்பட உள்ளது. இதில், தமிழகத்தை சேர்ந்த தொழில் முனைவோர் முதலீடு செய்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்காக, கர்நாடக தொழில் வர்த்தக சபை கூட்டம் கோவை பீளமேடு கொடிசியா அரங்கத்தில் நேற்று நடந்தது. கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா கலந்து கொண்டு பேசினார். கூட்டத்துக்குப் பின் சித்தராமைய்யா நிருபர்களிடம் கூறியதாவது:

காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் இரு மாநில மக்கள் இடையே நடந்த மோதல்கள் போல இனிமேல் கண்டிப்பாக நடக்காது.  சுப்ரீம் கோர்ட்டில் காவிரி பிரச்னை வழக்கு, நிலுவையில் உள்ளதால் தற்போது அதுகுறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. தற்போது, கர்நாடகா மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது.

அதனால், சாம்ராஜ் நகரில் உள்ள தொழில் மண்டலத்தில் எந்தவித தயக்கமின்றி முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய முன்வரலாம். இந்த தொழில் மண்டலத்தில் 12 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய கொங்கு மண்டலத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் முன்வந்துள்ளனர். கடந்த 2011&12ம் ஆண்டில் கர்நாடகா மாநிலத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. இதில், 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உறுதி செய்யப்பட்டது. கர்நாடகா மாநிலத்தில் முறைகேடாக நடந்து வந்த 51 கனிம சுரங்கங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. இந்த மூன்றாம் தரமான சுரங்கங்களின், மறு ஏலம் விரைவில் விடப்படும்.

Loading