சென்னை, ஏப்ரல் 07: சென்னையில் சிஆர்பிஎப் பாதுகாப்புடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
சிஆர்பிஎப் பாதுகாப்புடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை
சென்னை:
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான புதுக்கோட்டையில் உள்ள கல்லூரி, கல்குவாரி உள்பட தமிழகத்தில் மொத்தம் 30 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது. ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா தொடர்பாக அதிகமான குற்றச்சாட்டுகள் மற்றும் புகார்கள் எழுந்ததை தொடர்ந்து இந்த சோதனை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
வருமான வரித்துறை மூத்த அதிகாரி டைம்ஸ் நவ்க்கு அளித்து உள்ள பேட்டியில், “அமைச்சர் மற்றும் அவருடைய உறவினர்கள் வருமான வரித்துறையின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டு உள்ளனர். ஏப்ரல் மாதம் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவில் அமைச்சருக்கு நேரடியாக தொடர்பு உள்ளதாக கடந்த சில நாட்களாக எங்களுக்கு புகார்கள் வந்துக் கொண்டு இருந்தது. இந்நிலையில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது,” என கூறிஉள்ளார். அமைச்சருக்கு சொந்தமான கல் குவாரிகள், கல்லூரிகள் மற்றும் அவருடைய உறவினர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது என அதிகாரிகள் கூறிஉள்ளனர் என டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டு உள்ளது.
சமத்துவ மக்கள்கட்சி தலைவர் சரத்குமார் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
அதிமுக முன்னாள் எம்.பி சிட்லபாக்கம் ராஜேந்திரன் மற்றும் எம்ஜிஆர் மருத்துவ பல்கலை.துணைவேந்தர் கீதாலட்சுமி வீட்டிலும் வருமானவரி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். சென்னையில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் விடுதியிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் பல அதிமுக நிர்வாகிகளின் வீடுகளிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
![]()

