சென்னை: முன்னணி தமிழ் நடிகர் வினுசக்கரவர்த்தி உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.

அவருக்கு வயது 74. குரு சிஷ்யன்’, ‘அண்ணாமலை’ உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் வினு சக்ரவர்த்தி. உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு அதிகரிப்பு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மாலை 7 மணியளவில் மரணம் அடைந்தார். அவரது மனைவி பெயர் கர்ணப்பூ. மறைந்த வினுசக்கரவர்த்திக்கு சரவணன், சண்முகப்பிரியா என்கிற மகன், மகள் உள்ளனர்.

திரைத்துறையில் கதை, வசனகர்த்தாவாக அறிமுகமாகி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக வலம் வந்தவர் வினு சக்கரவர்த்தி. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பிறந்த இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, போன்ற மொழிகளில் 1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் நகைச்சுவை, குணசித்திர, வில்லன் வேடங்களிலேயே நடித்துள்ளார். குறிப்பாக தமிழில்தான் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை இறுதிச்சடங்கு நடைபெறும் என தெரிகிறது.

Loading