தலைநகர் சென்னை உட்பட தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக கடுமையான மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே கோடை வெயிலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மின்தடையை போக்க அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

சென்னையில் கோடம்பாக்கம், தியகாராயநகர், நந்தனம், கீழ்பாக்கம், அடையாறு, அண்ணா சாலை, மடிப்பாக்கம், எழும்பூர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட இடங்களில் நேற்றிரவு 2 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு நீடித்ததால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

வட சென்னையில் நிலைமை இன்னும் மோசமாக இருந்தது. இராயபுரம், காசிமேடு, பெரம்பூர், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, வியாசர்பாடி உள்ளிட்ட இடங்களில் பல மணி நேரம் மின்தடை நடைமுறைப்படுத்தப்பட்டது. சென்னையில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் 100 டிகிரியை தாண்டி வாட்டுகிறது. இரவு நேரத்திலும் கடுமையான புழுக்கம் நிலவுகிறது. இத்தகைய சூழலில் திடீரென மின்வெட்டு நடைமுறைப்படுத்தப் படுவதை சகித்துக்கொள்ள முடியாது.

மின்வெட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் சர்மா நகர் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். சென்னையில் மேலும் பல இடங்களிலும் மின்வெட்டைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். அதற்குப் பிறகும் நீண்ட நேரம் மின்வெட்டு சரி செய்யப்படாதது தமிழ்நாடு மின்வாரியத்தின் செயலற்ற தன்மையையேக் காட்டுகிறது.

தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு மின் தட்டுப்பாடு நிலவுகிறது. தமிழ்நாட்டில் நிலவும் மின் தடையை போக்க தமிழ்நாடு மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Loading