பாஜக கூட்டணிக்கு 240 இடங்கள் கிடைக்கும்: வைகோ நம்பிக்கை

vaigo

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 240 இடங்கள் கிடைப்பது உறுதி என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைவதாக அறிவித்துள்ள வைகோவை கடந்த 23-ஆம் தேதி தமிழக பாஜக தலைவர்கள் சந்தித்துப் பேசினர்.அதனைத் தொடர்ந்து சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் வைகோவை, பாஜக தேசியப் பொதுச்செயலாளர் முரளிதரராவ் சனிக்கிழமை சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பின்போது தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர் இல. கணேசன், மாநிலப் பொதுச்செயலாளர் எஸ். மோகன்ராஜூலு, மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா ஆகியோர் உடனிருந்தனர்.சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் முரளிதரராவ் பேசியதாவது:

வாஜ்பாய் ஆட்சியில் அங்கம் வகித்த மதிமுக, இப்போது மோடியின் தலைமையை ஏற்று மீண்டும் பாஜக கூட்டணியில் இணைவது மகிழ்ச்சி அளிக்கிறது. வைகோவின் பிரசாரம் பாஜக கூட்டணிக்கு வெற்றியைத் தேடித்தரும்.தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேசி வருகிறோம். அவர்களிடமிருந்து சாதகமான பதில்கள் வந்துள்ளன. கூட்டணி முடிவானதும் முறைப்படி அறிவிப்போம் என்றார் முரளிதரராவ்.

செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது:

இமயம் முதல் குமரி வரை நரேந்திர மோடி அலை வீசுகிறது. பாஜகவின் அழைப்பை ஏற்று வரும் பிப்ரவரி 8-ம் தேதி வண்டலூரில் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் நானும், மதிமுக தொண்டர்களும் பங்கேற்போம்.வாஜ்பாயைப் போலவே நரேந்திர மோடியையும் நான் மதிக்கிறேன். அவர் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று நம்புகிறேன். தமிழகத்தில் இதுவரை திமுக அல்லது அதிமுக தலைமையில் மட்டுமே கூட்டணி என்றிருந்தது. இந்தத் தேர்தலில் அது உடையும். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் அதிக இடங்களைக் கைப்பற்றும் என்றார் வைகோ.

By True Tamil

ஜனவரி 25, 2014
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு