இந்தியா- இங்கிலாந்து அணிகள் விரித்துள்ள ஆசை வலையில் பாகிஸ்தான் விழுந்து விடக் கூடாது என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில்(ஐ.சி.சி) பல்வேறு புதிய மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளன(வரும் 28, 29ல்).
இந்த தீர்மானங்கள் நிறைவேற நிரந்தர உறுப்பினர்களில் 10ல் 7 பேர் ஆதரவு தேவை.
இப்போதைய நிலையில் இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, வங்கதேசம், நியூசிலாந்து மற்றும் ஜிம்பாப்வே நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
முதலில் எதிர்ப்பு தெரிவித்த மேற்கிந்திய தீவுகளும் ஆதரவு நிலைக்கு மாறியுள்ளது.
தென் ஆப்ரிக்கா, இலங்கை, பாகிஸ்தான் அணிகள் எதிர்க்கப் போவதாக தெரிவித்தன.
இதற்கிடையே புதிய விதிகள் நிறைவேறினால் பாகிஸ்தானுடன் பொது இடத்தில் விளையாட தயார் என இந்தியா- இங்கிலாந்து அணிகள் அறிவித்தன.
இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித்தலைவர் ஜாகிர் அபாஸ் கூறுகையில், பாகிஸ்தானுக்கு லாலிபாப் கொடுத்துவிட்டு, மாற்றத்தை நிறைவேற்ற இந்தியா போன்ற நாடுகள் ஆதரவு கேட்க முயற்சிப்பது தெளிவாகத் தெரிகிறது. நீண்டகால திட்டத்தின் அடிப்படையில் இதை பாகிஸ்தான் அணுக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைமை அதிகாரி ஆரிப் அபாசி, இந்தியா, இங்கிலாந்து அணிகளின் ஆசை வலையில் பாகிஸ்தான் விழுந்துவிடக் கூடாது என்றும், இதில் கவனமாக இருக்க வேண்டும் எனவும் எச்சரிப்பதாக தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித்தலைவர், பயிற்சியாளர் மொசின் கான் கூறுகையில், வலிமையான பணபலம் உள்ளதால் ஒன்றிரண்டு போர்டுகள் உலக கிரிக்கெட்டை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கின்றன. இதை பாகிஸ்தான் முழுமையாக எதிர்க்க வேண்டும். இல்லையெனில், உலக கிரிக்கெட்டில் பிளவு ஏற்படும் என எச்சரித்துள்ளார்.
![]()

