புதுடெல்லி நரேந்திர மோடி பிரதமரானால் ஏற்றுக்கொள்வோம் என தேசிய மாநாடு கட்சி தலைவரும், மத்திய மந்திரியுமான பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.
காஷ்மீர் மாநிலத்தில் தேசிய மாநாடு கட்சியும், காங்கிரசும் இணைந்து கூட்டணி அரசை அமைத்துள்ளன. அங்கு தேசிய மாநாடு கட்சி சார்பில் உமர் அப்துல்லா முதல்-மந்திரியாக உள்ளார். மேலும் மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் புதுப்பிக்கவல்ல எரிசக்தி துறை மந்திரியாக பரூக் அப்துல்லா செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில், காஷ்மீரில் உமர் அப்துல்லா அரசு செயல்படுத்தும் சில திட்டங்களால், காங்கிரசுக்கும், தேசிய மாநாடு கட்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நரேந்திர மோடி பிரதமரானால் ஏற்றுக்கொள்வோம் என மத்திய மந்திரி பரூக் அப்துல்லா கூறியுள்ளார். இது குறித்து டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறிய அவர், இந்தியாவை போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் பொதுமக்கள் தான் பிரதமரை முடிவு செய்வர். அதன்படி நரேந்திர மோடியை பிரதமராக மக்கள் தேர்வு செய்தால், அது அவர்களது விருப்பம். அவ்வாறு நரேந்திர மோடி பிரதமரானால் அதை எல்லாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அது குறித்து தனது மகனும், காஷ்மீர் மாநில முதல்மந்திரியுமான உமர் அப்துல்லா முடிவு செய்வார் என்று கூறினார்.
![]()

