சேலத்தில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் காமலாபுரம் விமான நிலையம் அமைந்துள்ளது. தற்போது இங்கு விமான சேவை ஏதும் நடைபெறவில்லை. ஆனாலும் விமான நிலைய அதிகாரிகள் இங்கு பணியாற்றி வருகிறார்கள்.
இங்கு புதிய விமானிகள் பயிற்சி மற்றும் இயக்கம், பாராசூட் பயிற்சி போன்றவை மட்டும் அவ்வப்போது அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது புதியதாக தேர்வு செய்யப்பட்ட விமானிகளுக்கு இங்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதில் 4 பெண்கள் உள்பட 15 பேர் பயிற்சி பெற்று வருகிறார்கள். இவர்களுக்கு இன்று காலை விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதிப்பது தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் விமானத்தில் இருந்து 3 பேர் வீதம் ஒவ்வொரு முறையும் பாராசூட் மூலம் கீழே குதித்தனர். இதே போல் 2 ஆண்கள், ஒரு பெண் பயிற்சி விமானிக என 3 பேரும் விமானம் 150 அடி உயரத்தில் பறந்த போது பாராசூட் மூலம் கீழே குதித்தனர்.
அப்போது 2 ஆண் பயிற்சி விமானிகளும் சரியான முறையில் விமான நிலைய ஓடுதள பகுதியில் குதித்தனர். ஆனால் பெண் பயிற்சி விமானியின் பாராசூட் ஒரு புறம் சுழலவில்லை. இதையடுத்து அவர் விமான நிலையத்தின் அருகில் இருக்கும் ஒரு விவசாய தோட்டத்தின் கரட்டு பகுதியில் தவறிவிழுந்தார்.
இதை பார்த்த சிலர் ஓடிவந்தனர். அப்போது அந்த பெண்ணுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. உடனடியாக அவர்கள் விமான நிலையத்திற்கு சென்று அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து சென்று காயத்துடன் உயிருக்கு போராடிய பெண் விமானியை மீட்டு ஆம்புலன்சில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்து விட்டார்.
இதுப்பற்றி தெரியவந்ததும் ஓமலூர் இன்ஸ்பெக்டர் குமரேசன் மற்றும் போலீசார் விமான நிலையத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அவர்கள் அங்கு கிடந்த பாராசூட்டை மீட்டனர். தொடர்ந்து விபத்தில் இறந்த பெண் பயிற்சி விமானி குறித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் கர்நாடக மாநிலம் பெங்களூர் பால்யாநகர் பாப்பி ரெட்டிப்பகுதியை சேர்ந்த வினோத் என்பவரது மனைவி ரம்யா (26) என்பது தெரியவந்தது. மேலும் அருகில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, பாராசூட் முழுமையாக விரியாமல் சுழன்று, சுழன்று வந்ததாகவும், 10 முறை வட்டமிட்டப்படி வந்த பாராசூட் கரட்டு பகுதியில் விழுந்ததாகவும் தெரிவித்தனர்.
இதற்கிடையே இந்த விமான நிலையத்தில் விமானத்தில் இருந்து பாராசூட்டில் குதிக்கும் பயிற்சி நடத்த அதிகாரிகள் மறுத்து விட்டனர். அப்படி இருந்தும் இவர்கள் உயர் அதிகாரிகள் மூலம் அனுமதி பெற்று பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
![]()

