gas-cylinder

புது டெல்லி : மானிய விலையில் எரிவாயு சிலிண்டர்கள் வாங்க ஆதார் எண் தேவையில்லை என அரசு அறிவித்துள்ளது.

மேலும், வீட்டு உபயோகத்திற்கென மானிய விலையில் அரசு வழங்கும் சிலிண்டர்களின் எண்ணிக்கையை 12 உயர்த்தவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

2012ஆம் ஆண்டு செப்டம்பருக்கு முன்பு வரை எந்த வரைமுறையும் இல்லாமல் மானிய விலையில் எரிவாயு சிலிண்டர்களை பொதுமக்களுக்கு வழங்கி வந்த மத்திய அரசு, திடீரென அதன் எண்ணிக்கையை 6 ஆக குறைத்தது. இதனால், மக்களிடையே ஏற்பட்ட கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து எண்ணிக்கையை 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 9 ஆக அதிகரித்தது.

எனினும், அரசின் இம்முடிவுக்கு காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே அதிருப்தி நிலவி வந்தது. பல தரப்பிலிருந்தும் மானிய சிலிண்டரின் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்தது. அண்மையில் நடந்த காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டிக் கூட்டத்தில் பேசிய கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி, பிரதமரிடம் சிலிண்டரின் எண்ணிக்கையை 12 உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதனைத் தொடர்ந்து சிலிண்டரின் எண்ணிக்கையை 12 ஆக உயர்ந்த பெட்ரோலியத்துறை முடிவு செய்தது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, “வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டரின் எண்ணிக்கை 12 ஆக உயர்த்தப்படுகிறது. இதற்கான ஒப்புதலை அமைச்சரவை தெரிவித்துள்ளது. மேலும், மானிய சிலிண்டர்களைப் பெற இப்போது ஆதார் எண் தேவையில்லை. இது தொடர்பான ஆய்வுக்குப் பின் இறுதி முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

Loading