kanimozhi

தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி எம்.பி. இன்று வீடு திரும்புகிறார்.

சென்னை சி.ஐ.டி. காலனியில் உள்ள அவரது வீட்டில் கனிமொழி மயக்கமான நிலையில் இருந்ததையடுத்து அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

கனிமொழியை அவரது தாயார் ராஜாத்தி அம்மாள் அருகில் இருந்து கவனித்து வருகிறார்.நேற்று மாலை தி.மு.க. தலைவர் கருணாநிதி,பொருளாளர் மு.க. ஸ்டாலின், துரைமுருகன், ஜெகத்ரட்சகன் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு சென்று கனிமொழியிடம் உடல்நலம் விசாரித்தனர்.

கனிமொழிக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை பற்றி காவேரி மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கனிமொழி எம்.பி., உடல் அளவிலும், மனதளவிலும் சோர்வாக காணப்பட்டார். அவருக்கு திரவ மருந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பூரணமாக உடல்நலம் பெற்று விரைவில் வீடு திரும்புவார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கனிமொழிக்கு உடல் நிலை தேறியதால் இன்று மாலை அவர் வீடு திரும்புவார் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

Loading