இன்று இரவு வானில் வானியல் ஆர்வலர்களை வியப்பில் ஆழ்த்தும் ஒரு அபூர்வ நிகழ்வு அரங்கேறியது. ஏற்கனவே வானில் தென்பட்டு வந்த 6 கோள்களுடன் புதன் கோளும் இன்று இணைந்ததால், ஒரே நேரத்தில் ஏழு கோள்கள் வானில் காட்சியளிக்கும் அரிய காட்சி உருவானது. இந்த அபூர்வ கிரக வரிசையை இன்று இரவு பலரும் கண்கூடாகக் காண முடிந்தது.

சமீப காலமாக தெளிவான இரவு நேரங்களில் வானத்தை நோக்கி பார்த்தவர்களுக்கு இது ஒரு விருந்தாகவே அமைந்தது. வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய ஆறு கோள்கள் ஏற்கனவே இரவு வானில் தென்பட்டு வந்த நிலையில், இன்று புதன் கோளும் சேர்ந்து, ஏழு கோள்கள் ஒரே நேரத்தில் வானில் காட்சியளித்தன.

இது வானியல் ஆர்வலர்களுக்கான காட்சியாக மட்டுமல்ல; சூரிய மண்டலத்தில் நமது நிலை மற்றும் கிரகங்களின் இயக்கம் குறித்த புரிதலையும் இது வழங்குகிறது.

நமது சூரிய குடும்பத்தில் உள்ள எட்டு முக்கிய கோள்களும் சூரியனை வெவ்வேறு வேகங்களில் சுற்றி வருகின்றன. சூரியனுக்கு மிக அருகிலுள்ள புதன் கோள் 88 நாட்களில் ஒரு சுற்றை நிறைவு செய்கிறது. பூமி 365 நாட்களில் ஒரு சுற்றை முடிக்கிறது. அதே நேரத்தில், நெப்டியூன் சூரியனை சுற்றி வர சுமார் 165 ஆண்டுகள் ஆகின்றன.

இந்த வேக வேறுபாடுகளின் காரணமாக, சில நேரங்களில் பல கோள்கள் சூரியனின் ஒரே பக்கத்தில் வரிசையாக அமைவது உண்டு. பூமியிலிருந்து பார்ப்பதற்கு, அது ஒரே இரவில் பல கிரகங்களை ஒரே நேரத்தில் காணும் அபூர்வ வாய்ப்பாக அமைகிறது. மிக அரிய சில சந்தர்ப்பங்களில், அவை ஒரே நேர்கோட்டில் அணிவகுப்பது போல் காட்சியளிக்கும் – அதுவே இன்று வானில் நடந்த அதிசயம்.

இது ஒரு சாதாரண வானியல் நிகழ்வு அல்ல; இயற்கை நமக்குக் கொடுத்த ஒரு அரிய காட்சி!

Loading