அழகர்கோவில் சித்திரை திருவிழாவையொட்டி அழகர் கோவிலில் இருந்து மதுரை வரும் கள்ளழகர் சுவாமி 435 திருக்கண் மண்டகப் படியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் என்ற சுந்தரராஜபெருமாள் கோவிலின் சித்திரை திருவிழா இம்மாதம் 26–ந் தேதி துவங்கியது.
108 வைணவ திருத்தலங்களின் வரிசையில் 3–வது இடத்தில் கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள் கோவில் விளங்குகிறது. இக்கோவிலின் சித்திரைத் திருவிழா இம்மாதம் 26–ந் தேதி துவங்கியது. இன்று இரவு கொண்டப்பநாயக்கர் மண்டபத்தில் இருந்து கள்ளழகர் சுவாமி கள்ளர் திருக்கோலத்தில் மதுரைக்கு புறப்படுகிறார். வழிநெடுக திருக்கண் மண்டகப்படியில் எழுந்தருளி 29–ந் தேதி காலை மூன்றுமாவடி என்ற இடத்தில் கள்ளழகர் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடக்கிறது. அன்று இரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோவிலில் தங்குகிறார். அன்று இரவு முழுவதும் வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடக்கிறது. மறுநாள் 30–ந் தேதி காலை 5.45 மணி முதல் 6.15 மணிக்குள் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவ நிகழ்ச்சி நடக்கிறது. வைகை ஆற்றில் இறங்கும் வைபவ நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். கூட்ட நெரிசலை சமாளிக்க தல்லாகுளம், கோரிப்பாளையம் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 15 அகன்ற திரைமூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவ நிகழ்ச்சியையொட்டி வைகை அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். அதனையொட்டி நேற்று வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மே 1–ந் தேதி ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம், மே 3–ந் தேதி பூப்பல்லக்கு, மே 5–ந் தேதி கள்ளழகர் அழகர்கோவிலுக்கு போய் சேருகிறார்.
![]()

