கமல்ஹாசன், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை வரவேற்றபடி, அவருடன் ஒத்தகடை மைதானத்தில் அமைக்கப்பட்ட பொதுக் கூட்டத்துக்கு வருகை தந்தார். கட்சிக் கொடியேற்றினார். மேடையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில், கமல்ஹாசன் தனது கட்சி பெயரை மக்கள் நீதி மய்யம் என அறிவித்தார். இதையடுத்து கூட்டத்தில் பெரும் ஆரவாரம் எழுந்தது.

கமல்ஹாசன், இந்தியாவைத் தாண்டி உலக அளவில் அறியப்படும் தமிழ் நடிகர்! தமிழ் சினிமாவின் எல்லையை புதிய உயரத்திற்கு எடுத்துச் சென்றவர் அவர் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. இந்தியில் ஷாருக்கான் இன்று முயற்சி செய்யும் குள்ள வேடத்தை எப்போதோ அபூர்வ சகோதரர்களில் சாதித்தவர் அவர்!

கமல்ஹாசனின் சினிமா, ஒரு வெற்றிப் பயணம்தான். அதில் உச்சம் தொட்டு நின்ற போதெல்லாம்கூட அரசியல் குறித்து யோசிக்க மறுத்த கமல்ஹாசன், இப்போது தனிக் கட்சி, தனிக் கொடி என களம் இறங்குகிறார். இதற்கான கடந்த சில நாட்களாக அவர் மேற்கொண்டிருந்த முன் தயாரிப்புகள் பலரையும் புருவம் உயர்த்த வைத்தது.

கமல்ஹாசன் அண்மையில் ஹார்வர்ட் பல்கலைக்கு சென்றபோதும்கூட, அங்கிருந்த நிபுணர்களை சந்தித்து தமிழக தேவைகள் குறித்து விவாதித்தார். முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி டி.என்.சேஷன், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, திமுக தலைவர் கருணாநிதி மற்றும் சினிமாவில் இருந்து அரசியலுக்கு சென்றவர்கள் என்ற அடிப்படையில் விஜயகாந்த், சீமான் ஆகியோரை சந்தித்து உரையாடினார்.

Loading