புதுடில்லி: இத்தியணிக்கு 21 ஆண்டுகள் கழித்து உலக கோப்பையை பெற்றுத்தந்த முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனிக்கு இன்று பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.

குடியரசு தினத்தை முன்னிட்டு கலை, இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி 2017-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் கடந்த ஜனவரி மாதம் 84 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில், இளையராஜா உட்பட மூன்று பேருக்கு பத்ம விபூஷண், கிரிக்கெட் வீரர் தோனி உட்பட ஒன்பது பேருக்கு பத்ம பூஷண், தமிழகத்தை சேர்ந்த நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் உட்பட 72 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில் கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி பத்மபூஷண் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

தோனியின் பெயரை இந்திய கிரிக்கெட் வாரியம் அரசுக்குப் பரிந்துரை செய்திருந்தது. தோனி இந்திய கிரிக்கெட் அணிக்குச் சிறந்த பங்களிப்பை அளித்திருக்கிறார். அவருடைய தலைமையில் இந்திய அணி 20 ஓவர் மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பைகளை வென்றது. டெஸ்ட் அரங்கிலும் சிறந்த இடத்தைப் பிடித்தது. இதனால் இவருக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டது.

குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று  நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் இரண்டாம் கட்ட விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருதை வழங்கினார் அதை ராணுவ உடையில் வந்து கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி பத்மபூஷண் விருதைப் பெற்றுக் கொண்டார்.

இவ்விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

இதில் சிறப்பம்சம் என்னவென்றால், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் (ஏப்ரல் 2, 2011) மகேந்திரசிங் தோனி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

#PadmaBhushan #MSD #Mahi #RamNathKovind #PadmaAwards

Loading