Special Buses Tnstc

வார விடுமுறை நாட்களை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் 570 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் பயணம் செய்ய இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குனர் ஆர். மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வார இறுதி நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் மற்றும் மீண்டும் நகரங்களுக்கு திரும்பும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், முன்கூட்டியே சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு டிசம்பர் 19ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) 240 சிறப்பு பேருந்துகளும், டிசம்பர் 20ஆம் தேதி (சனிக்கிழமை) 255 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

மேலும், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 19 மற்றும் 20ஆம் தேதிகளில் மொத்தம் 55 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மாதாவரம் பேருந்து நிலையத்திலிருந்தும் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் மொத்தம் 20 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வார விடுமுறை முடிந்து ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை சென்னை மற்றும் பெங்களூரு நோக்கி திரும்பும் பயணிகளின் வசதிக்காக, தேவைக்கேற்ப அனைத்து முக்கிய இடங்களிலிருந்தும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

இந்த சிறப்பு ஏற்பாடுகள் மூலம் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் குறையும் என்றும், பாதுகாப்பான மற்றும் நெரிசலற்ற பயணம் உறுதி செய்யப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். பொதுமக்கள் அரசு பேருந்துகளை பயன்படுத்தி ஒத்துழைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Loading