அமெரிக்காவில் கண்பார்வையற்ற இருவருக்கு விழித்திரை பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
அமெரிக்காவின் மிக்சிகன் பல்கலைக்கழகத்தின் கெல்லாக் கண் மருத்துவ மையத்தைச் சேர்ந்த திரன் ஜெயசுந்தரா மற்றும் டேவிட் என் ஸாக்ஸ் என்ற மருத்துவர்கள் பார்வையற்ற இருவருக்கு செயற்கை விழித்திரைகளைப் பொருத்தி தங்களது அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர்.
தங்களின் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்துள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ஜெயசுந்தரா, நோயாளிகளின் முன்னேற்றமும் தங்களுக்குத் திருப்தியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சிகிச்சை மூலம் அவர்கள் தங்கள் வீட்டில் சுதந்திரமாக நடமாடவும், மற்றவர்களைப் போல் பிற விஷயங்களைப் பார்த்து மகிழ்ச்சியடையவும் முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆர்கஸ் II ரெடினல் புரோஸ்தசிஸ் என்று அழைக்கப்படும் இந்த செயற்கை விழித்திரையானது கடந்தாண்டு முதல் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் அனுமதியை பெற்றது.
நோயாளி அறுவை சிகிச்சையிலிருந்து பூரணமாகக் குணமடைந்த பின்னரே விழித்திரையின் செயல்பாடு தொடங்கும்.
இதன் பின்னர் மூன்று மாத காலத்திற்கு புதிய பார்வைத் திறனுக்கான பயிற்சி வழங்கப்படுகிறது என மருத்துவத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
![]()

