ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத மத்திய அரசைக் கண்டிக்கும் விதமாக ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.பி.கள் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த மார்ச் 5ம் தேதி தொடங்கியது. இன்றுடன் கூட்டத்தொடர் முடிவடையும் நிலையில் ஏறத்தாழ 21 நாட்களாக ஆந்திரா, தமிழக எம்.பிகளின் அமளியால் இரு சபைகளின் நடவடிக்கைகளும் முடங்கின.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழக எம்.பிகளும், ஆந்திராவிற்குசிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திர எம்.பிகளும் நாடாளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரங்கள் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதே போன்று வங்கி மோசடி, எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்டவை குறித்து மத்திய அரசு நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி காங்கிரஸ் மற்றும் பஞ்சாப் மாநில எம்.பிகள் போராட்டம் செய்தனர்.
இந்நிலையில், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத மத்திய அரசை கண்டித்து ஒய்.எஸ்.ஆர். கட்சியின் எம்.பி.க்கள் இன்று தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். ஆந்திராவின் பிரதான எதிர்க்கட்சியான ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு லோக்சபாவில் 5 எம்.பி.க்கள் உள்ளனர். மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஒய்.எஸ்.ஆர். கட்சி எம்.பிக்கள் ராஜினாமா கடிதத்தினை சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் வழங்கியுள்ளனர். ஏற்கனவே, இந்த விவகாரம் தொடர்பாக தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த எம்.பிக்கள் தங்களது எம்.பி பதவியை ராஜினாமா செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
![]()

