சென்னை : ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக சார்பில் மருது கணேஷ், அதிமுக சார்பில் மதுசூதனன் மற்றும் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார்கள். பாஜக விரைவில் வேட்பாளரை அறிவிக்கும் என தெரிவித்துள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலை எதிர்கொள்வது தொடர்பான ஆலோசனை வேட்பாளர் மதுசூதனன் இல்லத்தில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மைத்ரேயன்:
89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அது தொடர்பாக பதிலளிக்க முடியாது என்றார்.
அதிமுக கொடியை தினகரன் பயன்படுத்த முடியாது. அதனால்தான் கொடியில் அண்ணா படத்தை அவர் பயன்படுத்தவில்லை. கட்சிக்கொடியில் அண்ணாவின் படத்தை போடாமல் விட்டதில் இருந்தே டிடிவி தினகரனின் தோல்வி உறுதியாகி விட்டது என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவில் தொண்டர்கள் ஒற்றுமையாக தேர்தல் பணியாற்றுவார்கள் என்றும், வேட்பாளர் மதுசூதனன் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றும் கூறினார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நேர்மையாக நடத்துவது தேர்தல் ஆணையத்துக்கு மிகப் பெரிய சவால். ஆர்.கே.நகரில் அதிமுக வெற்றிப் பெற பாஜக உதவி தேவையில்லை. தமிழகத்தில் பாஜக ஒரு பொருட்டே இல்லை. பாஜகவுக்கு தமிழகத்தில் வாக்கு வங்கி இல்லை என்றும் அதிமுக எம்.பி.மைத்ரேயன் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அதிமுக சார்பில் பிரச்சாரம் வருகின்ற 6-ம் தேதி துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
![]()

