புதுடெல்லி : நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி கட்டணம் ரத்து டிசம்பர் 2ம் தேதி நள்ளிரவு வரை நீட்டிப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். கள்ள நோட்டு புழக்கம் மற்றும் கருப்பு பணத்தை ஒழிக்க பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டு செல்லாது என மத்திய அரசு கடந்த 8ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இதனால் பணப்புழக்கம் குறைந்தது. ஏடிஎம் மையங்கள் முடங்கின. வங்கியில் பணம் பெற உச்சவரம்பு மற்றும் கட்டுப்பாடுகளால் பணச்சிக்கல் அதிகரித்தது. இதையடுத்து சுங்கச்சாவடி கட்டணம் நவம்பர் 11ம் தேதி நள்ளிரவு வரை ரத்து செய்வதாக கடந்த 9ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்பிறகும் சில்லரை தட்டுப்பாடு தொடர்ந்ததால், கட்டணம் ரத்து 14ம் தேதி வரையிலும், பின்னர் 18ம் தேதி நள்ளிரவு வரையிலும், பின்னர் 24ம் தேதி வரையிலும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் ரத்து சலுகை நீட்டிப்பு செய்யப்பட்டது. இந்த சலுகை மேலும் அடுத்த மாதம் 2ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்கரி கூறுகையில், நெடுஞ்சாலைகளில் சீரான போக்குவரத்துக்கு வகை செய்ய, சுங்கச்சாவடிகளில் கட்டணம் ரத்து கடந்த 24ம் தேதி வரை அமலில் இருந்தது. இது டிசம்பர் 2ம் தேதி நள்ளிரவு வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது என்றார். டிசம்பர் 2ம் தேதி நள்ளிரவுக்கு பிறகு டிசம்பர் 15ம் தேதி வரை பழைய 500 ரூபாய் நோட்டு ஏற்குமாறு சுங்கச்சாவடிகளுக்கு நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதவிர, பணமாற்ற பரிவர்த்தனைக்காக பாரத ஸ்டேட் வங்கி உதவியுடன் சுங்கச்சாவடிகளில் பாயின்ட் ஆப் சேல் கருவிகள் நிறுவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
![]()

