Congress holding parleys with DMDK

காங்கிரஸ் சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து கடந்த இரு நாள்களாக விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் செவ்வாய்க்கிழமை விருப்ப மனுக்களை பலர் ஞானதேசிகனிடம் நேரில் அளித்தனர்.

காங்கிரஸ் சார்பில் பிப்ரவரி 10, 11 ஆகிய இரு நாள்கள் விருப்ப மனுக்கள் பெறப்படும் பிப்ரவரி 8-ஆம் தேதி தான் என அறிவித்தோம். ஆனாலும் 39 தொகுதிகளுக்கும் 1,200-க்கும் அதிகமானோர் விருப்ப மனு அளித்துள்ளனர்.

இதனால் கடந்த இரு நாள்களாக சத்தியமூர்த்தி பவன் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. தொண்டர்களிடம் ஏற்பட்டுள்ள இந்த உற்சாகம் காங்கிரஸின் பலத்தை நிரூபிக்கிறது.

பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் அனுமதி கேட்டிருக்கும் தகவல் உண்மைதான். இன்னும் ஓரிரு நாள்களில் இந்தச் சந்திப்பு நடைபெறும்.

யாராலும் தனிமைப்படுத்த முடியாத அளவுக்கு தமிழகத்தில் காங்கிரஸ் பலம் வாய்ந்த சக்தியாக உள்ளது. உத்தரப்பிரதேசம், பிகார் மாநிலங்களைவிட தமிழகத்தில் காங்கிரஸ் பலமாக உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் கூட்டணி குறித்து பல கட்சிகளுடன் காங்கிரஸ் பேச்சு நடத்தி வருகிறது. எந்தெந்த கட்சிகளுடன் பேசி வருகிறோம் என்பதை இப்போது கூற முடியாது. உடன்பாடு ஏற்பட்டதும் அறிவிப்போம்.

தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள சோனியா, ராகுல் காந்தி ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளோம். வரும் மார்ச் மாதத்தில் அவர்கள் பங்கேற்கும் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடைபெறும்.

சென்னையில் மோடி பொதுக்கூட்டத்தில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் திரளப் போகிறார்கள் என்றார்கள். ஆனால் யாரும் வரவில்லை. கூட்டத்தால் வாக்குகளைப் பெற முடியாது என்பது தமிழகத்திஸ் நிரூபிக்கப்பட்ட ஒன்றாகும்.

மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் குறித்த மோடியின் விமர்சனம் அநாகரிமானது. பிரச்னைகளைப் பற்றி பேசும் மோடி, அதற்கான தீர்வுகளை எங்கும் முன்வைக்கவில்லை.

மோடி சூறாவளி பிரசாரம் செய்வதாக ஊடகங்கள் சொல்கின்றன. சூறாவளி அழிவைத்தான் ஏற்படுத்தும். மோடி அழிவுக்கான பாதையில் செல்கிறார். வரும் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதி என்றார் ஞானதேசிகன்.

Loading