வைகோ கைது! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

வைகோ கைது! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

சென்னை, ஏப்ரல் 03: ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசினார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது நடந்த தி.மு.க. அரசு வைகோ மீது வழக்கு தொடர உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து வைகோ மீது போலீசார் தேச துரோக வழக்கு பதிவு செய்தனர். வழக்கு விசாரணை சென்னை எழும்பூரில் உள்ள கோர்ட்டில் நடந்து வந்தது.

கடந்த 8 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் வைகோ அடிக்கடி கோர்ட்டில் ஆஜராகி வாதாடி வந்தார். இன்று (திங்கட்கிழமை) அந்த வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டியது.

வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு வைகோ மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருப்பதை உறுதி செய்தார். பிறகு தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தார்.

என்றாலும் வைகோ ஜாமீன் பெற்று விடுதலை ஆகி கொள்ளலாம் என்று தெரிவித்தார். ஆனால் ஜாமீனில் விடுதலையாக விரும்பவில்லை என்று வைகோ கூறினார்.

இதையடுத்து வைகோவை 15 நாள் கோர்ட்டு காவலில் வைக்கும்படி 13-வது குற்றவியல் நடுவர் மன்ற கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு கோபிநாத் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் வைகோவை கைது செய்தனர். புழல் ஜெயிலில் வைகோ அடைக்கப்பட உள்ளார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளர் ஆவார். பல தடவை அவருக்கு நெருக்கடிகள் ஏற்பட்டபோதும் அவர் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு கொடுப்பதில் இருந்து பின் வாங்கவில்லை.

விடுதலைப்புலிகளுக்கு எதிராக இறுதிக்கட்ட போர் நடந்த போது அவர் மத்திய அரசையும், மாநில அரசையும் கடுமையாக சாடினார். இதற்காக அவர் மீது பல வழக்குகள் உள்ளது.

கடந்த 2001-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் விடுதலைப்புலிகளுக்கு வைகோ ஆதரவு தெரிவிப்பதை கண்டித்தார். அதோடு வைகோவை ‘பொடா’ சட்டத்தில் கைது செய்தார்.

வேலூரில் உள்ள மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார். 19 மாதங்கள் அவர் சிறையில் கழிக்க நேரிட்டது. என்றாலும் அவர் விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் கொள்கையை மாற்றிக் கொள்ளவில்லை.

1964-ம் ஆண்டு வைகோ அரசியலில் நுழைந்தார். தி.மு.க.வின் பிரசார பீரங்கியாக திகழ்ந்த அவர் பாராளுமன்ற மேல்- சபை உறுப்பினராக இருந்தார். அப்போது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பல தடவை பேசி உள்ளார்.

1994-ம் ஆண்டு தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும், அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து ம.தி.மு.க. எனும் புதிய கட்சியை தொடங்கினார்.

ம.தி.மு.க. தொடங்கப்பட்ட பிறகு கடந்த 23 ஆண்டுகளில் அவர் பல தடவை சிறை சென்றுள்ளார்.

இந்த நிலையில் தற்போது தேச துரோக வழக்குக்காக திடீரென அவர் 15 நாள் ஜெயிலில் அடைக்கப்படுவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

By True Tamil

ஏப்ரல் 3, 2017
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு