VHP Rath Yatra

ராமஜென்ம பூமியில் ராமர் கோயில், ராமராஜ்ஜியத்தை மீண்டும் அமைத்தல், கல்வி பாடத்திட்டத்தில் ராமாயணம், உலக இந்து தினம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் ரத யாத்திரை தொடங்கப்பட்டது.

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்த யாத்திரையைத் தொடங்கிவைத்தார். மத்தியப்பிரதேசம், மஹாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா வழியாகத் தமிழகம் வரும் ரத யாத்திரை, நாளை (20.3.2018) ராஜபாளையம் வருகிறது. அங்கிருந்து ஸ்ரீவில்லிப்புத்துார், கல்லுப்பட்டி, திருமங்கலம் வழியாக மதுரை சென்று, அதே நாளில் பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது. இறுதியாக, ராமேஸ்வரம் சென்று ரதயாத்திரை முடிவடைகிறது. இந்த ரதயாத்திரைமூலம் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளதால், அனுமதி வழங்கக் கூடாது என இன்று எம்.எல்.ஏ-க்கள் அபுபக்கர், கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை சபாநாயகர் ஏற்க மறுக்கவே, அவர்கள் வெளிநடப்புசெய்தனர்.

விஷ்வ ஹிந்து பரிஷத்தின் ரத யாத்திரைக்கு தமிழகத்தில் திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய ஜனநாயகக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ரத யாத்திரையின் வருகையைக் கண்டித்து நாளை காலை 8 மணிக்கு செங்கோட்டை அருகே உள்ள புளியரை சோதனைச் சாவடியில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், நாளை விஷ்வ இந்து பரிஷத் ரத யாத்திரைக்கு எதிராக போராட்டம் நடத்த செங்கோட்டை செல்ல முயன்றபோது தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் காஞ்சிபுரத்தில் கைது செய்யப்பட்டார். மேலும், செங்கோட்டைப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

இதனையடுத்து, நெல்லை மாவட்டம் முழுவதும் வரும் 23ம் தேதி காலை 6 மணி வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மு.க. ஸ்டாலின்

இப்போது திமுக விஷ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரையை தமிழகத்திற்குள் நுழைய விடாமல் அதிமுக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. இந்த யாத்திரைக்கு, தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “ராம் ராஜ்ய யாத்திரை” என்ற பெயரில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவு திரட்டுகிறோம் என்ற போர்வையில், தமிழ்நாட்டிற்குள் யாத்திரை நடத்துவதற்கும், அந்த யாத்திரை நடத்துவதற்கு அனுமதித்துள்ள அ.தி.மு.க அரசுக்கும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் நிலவிவரும் மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் வகையில் விஸ்வ ஹிந்து பரிஷத் முயற்சிப்பது, பொதுஅமைதிக்கு பங்கம் விளைவிக்கும் திட்டமிட்ட நடவடிக்கையாகும். உச்ச நீதிமன்றத்தில் ராமர் கோயில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, இப்படி நாடு முழுவதும் ராமர் கோயில் கட்ட ஆதரவு திரட்டுவதற்காக யாத்திரை நடத்துவது, உச்சநீதிமன்ற அவமதிப்பாகும்.

விஎச்பி யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்படும் என பல்வேறு கட்சிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் விஸ்வ இந்து பரிசத் அமைப்பின் ரத யாத்திரை வருவதை முன்னிட்டு நெல்லை மாவட்டம் செங்கோட்டை, தென்காசிக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மாவட்ட ஆட்சியர் உத்தரவை பிறப்பித்து உள்ளார்.

Loading