பிப்ரவரி 27: முன்பதிவு செய்துவிட்டு, அந்த டிக்கெட்டில் பயணிக்காத பயணிக்கு இனி டிக்கெட் கட்டணம் திரும்ப கிடைக்காது என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டில் குறிப்பிட்ட நாளில் பயணக்காத ஒரு பயணி, ரயில் புறப்பட்ட 2 மணி நேரத்திற்குள் 50 சதவிகித தள்ளுபடியுடன் தனது டிக்கெட்டிற்கான ரீபண்ட் தொகையை பெற்றுக்கொள்ள முடியும்.
தற்போது இதற்கான மானியத் திட்டத்தை மாற்றி அமைத்துள்ள ரயில்வே துறை, பொது இட ஒதுக்கீட்டு முறையில் இதுபோல் முன்பதிவு செய்யப்படும் தனியார் அல்லது ஒரு குழுவின் சில நபர்கள் பயணத்தைத் தவறவிட்டால் அதற்கு ரீபண்ட் அளிக்கப்படமாட்டாது என்று தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை வரும் மார்ச் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
மத்திய ரயில்வேயின் மூத்த பிரதேச வர்த்தக மேலாளர் டாக்டர்.சுமந்த் டியுல்கர், கடந்த 21 ஆம் தேதி இந்த தீர்மானம் குறித்த ஒரு சுற்றறிக்கையை ரயில்வே வாரியத்தின் அனைத்துப் பொது மேலாளர்களுக்கும் அனுப்பியுள்ளார். கணினிமயமாக்கப்பட்டுள்ள ரீபண்ட் திட்டத்தை இந்தப் புது அறிக்கைக்குத் தகுந்தாற்போல் மாற்றியமைத்துக் கொள்ளும்படி அனைத்துப் பிரிவினருக்கும் ரயில்வே வாரியத்தின் போக்குவரத்து வர்த்தக இணை இயக்குனர் ரோஹித் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
எனினும், கீழ் வகுப்பிற்கான முன்பதிவு, ஆர்.ஏ.சி. டிக்கெட்டுகள், ரயில்வே பெட்டியில் குளிர்சாதன வசதி செயல்படாமல் இருத்தல், ரயில் சேவைகளின் இடமாறுபாட்டால் பயணிகளின் பயணம் இடையில் நிறுத்தப்படுதல், இடவசதி ஒதுக்கீடு அளிக்கப்படாதது, ரயில்கள் ரத்து போன்ற காரணங்களுக்கான ரீபண்ட் திட்டம் தொடரும் என்று நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
காத்திருக்கும் பட்டியலில் உள்ள டிக்கெட்டுகளுக்கு தற்போதுள்ள விதிமுறைப்படி ரீபண்ட் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் இந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
![]()

