பிப்ரவரி 28: பேட்டிங்கை விட தனது மனைவிக்கு கடிதம் எழுதுவது மிகவும் கஷ்டமானது என தனது சுவாரசியமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.
சென்னையில் நேற்று நடந்த பள்ளிக் குழந்தைகளுக்கான கையெழுத்து பிரசார இயக்கத்தில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கலந்து கொண்டார்.
அப்போது கடிதம் எழுதுவது பற்றிய தனது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறுகையில், செல்போன் இல்லாத எனது இளமை நாட்களில் நினைத்தவுடன் அனைவரையும் தொடர்பு கொள்வது இயலாத காரியம்.
தொலைபேசி மற்றும் கடிதம் மட்டுமே தொலைத்தொடர்புக்கு வழியாக இருந்தது.
எனவே நான் கடிதம் எழுத ஆரம்பித்தேன், முதலில் எனது பெற்றோருக்கும் எனது மனைவிக்கும் கடிதங்கள் எழுதினேன்.
கிரிக்கெட்டில் பந்தை எதிர்கொள்வது எனக்கு எளிதானது. ஆனால் என் மனைவி அஞ்சலிக்கு கடிதம் எழுதுவது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது.
எனது மனைவியின் கையெழுத்து மிகவும் அழகாக இருக்கும். அதேபோல் எனது சக கிரிக்கெட் வீரர் அனில்கும்ப்ளேவின் கையெழுத்தும் மிகவும் அழகாக இருக்கும்.
எனது குழந்தைகள் என் வீட்டுச்சுவரில் அழகாக கிறுக்கி எழுதிவைப்பார்கள்.
கிரிக்கெட் ஓய்வுக்கு பிறகு என்னால் எனது குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட முடிகிறது.
வாழ்க்கை மிகவும் அழகானது, தற்போதுள்ள குழந்தைகளுக்கு கையெழுத்து பயிற்சி மிகவும் அவசியமானதாகும் என்று தெரிவித்தார்.
வலது கை பேட்ஸ்மேனான சச்சின் இடது கையால்தான் எழுதுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
![]()

