evks-elangovan

மார்ச் 19, ஈரோடு காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி தந்த கட்சி காங்கிரஸ். இந்த கட்சிதான் கடந்த 60 ஆண்டுகளாக நாட்டை பாதுகாத்து, வல்லரசாக்க அஸ்திவாரம் போட்டுள்ளது. உலக அளவில் அரசியலில் அங்கீகாரம் பெற்ற கம்யூனிஸ்டு கட்சிகளை ஜெயலலிதா ஏமாற்றி விட்டார். காங்கிரஸ் கட்சி மீது அபாண்ட பழி சுமத்துவதை ஜெயலலிதா நிறுத்திக்கொள்ள வேண்டும்.

திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளேன். வாய்ப்பு கிடைத்தால் போட்டியிடுவேன். திருப்பூரில் தேர்தல் பிரசாரம் செய்ய அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவி சோனியாவுக்கு நேரில் அழைப்பு விடுத்துள்ளேன். பலம் இல்லாத வலுவிழந்த கட்டிடமாக தமிழக பா.ஜ.க. கூட்டணி உள்ளது. அதில் சில செங்கல்கள் பெயர்ந்து விழுந்து வருகின்றன. விரைவில் கட்டிடம் நொறுங்கி போகும்.

நாட்டில் மோடி அலையும் இல்லை. சுனாமியும் இல்லை. புயலும் இல்லை. மோடி வெறும் புழுதிகாற்று. அந்த காற்றும் அடங்கிவிட்டது. கடந்த 2 மாதமாக மோடியின் அகங்கார பேச்சினால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். அதே நேரம் ராகுல் காந்தியின் அமைதியான பேச்சு அவர் மீது மக்களுக்கு ஈர்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. 2004, 2009 போன்று கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜ.க. கூட்டணியில் இருந்து பா.ம.க. வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா? என்று கேட்டதற்கு முதலில் ராமதாஸ் வெளியே வரட்டும். அதன்பின்னர் மேலிடம் முடிவு செய்யும் என்றார்.

Loading