ஆகஸ்ட் 13, டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி மேற்கொள்வதற்கு ஏதுவாக மேட்டூர் அணையிலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆக.10) முதல் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. விநாடிக்கு ஏறத்தாழ 9,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர், கல்லணையை 4 நாள்களில் வந்தடைவது வழக்கம். மேட்டூர் அணையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை திறந்துவிடப்பட்ட தண்ணீர் கரூர் மாவட்டத்தில் உள்ள மாயனூர் தடுப்பணைக்கு திங்கள்கிழமை இரவு வந்தது. இந்தத் தண்ணீர் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முக்கொம்புக்கும், புதன்கிழமை திருச்சிக்கும், வியாழக்கிழமை காலை கல்லணைக்கும் வந்தடையும் எனப் பொதுப் பணித் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
எனவே, கல்லணையிலிருந்து வியாழக்கிழமை முற்பகல் தண்ணீர் திறந்துவிட வாய்ப்புள்ளது. இதற்கான அரசின் உத்தரவை பொதுப் பணித் துறையினர் எதிர்பார்த்துள்ளனர்.
இதனிடையே, கல்லணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட உள்ள நிலையில் கல்லணையில் உள்ள காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆகியவற்றில் உள்ள மதகுகளைச் சீரமைத்தல், புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன.
மேலும், தண்ணீர் அதிகமாக வரும் காலத்தில் கல்லணையில் உயிரிழப்புகளைத் தவிர்ப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
![]()

